டயலொக் -16, பியோ ரிவி 09இல் 'ஹரித' தொலைக்காட்சி சேவை ஜனாதிபதியால் ஆரம்பிப்பு

“ஹரித” ( பசுமை ) தொலைக்காட்சி அலைவரிசையின் முதலாவது சேவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று (31) முற்பகல் கொழும்பு ஹுணுப்பிட்டிய கங்காராம விகாரையில் ஆரம்பமானது. 

விவசாயத் துறையினால் போஷிக்கப்பட்ட இந்நாட்டின் கடந்தகால சுபீட்சத்தை மீண்டும் ஏற்படுத்தும் நோக்குடன் சமய பின்புலத்துடன் சிறந்ததோர் விவசாய பொருளாதாரத்திற்கு வழிகாட்டுவது இந்த அலைவரிசையின் பிரதான நோக்கமாகும். 

விவசாய கைத்தொழிலின் மூலம் வாழ்ந்து வரும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல், புதிய விவசாய தொழிநுட்ப முறைமைகள், பண்டைய காலத்திலிருந்துவந்த உயர் விவசாய தொழிநுட்ப முறைமைகளை மீண்டும் ஏற்படுத்துதல், சுற்றாடல் பாதுகாப்பு, நீர்ப்பாசன மற்றும் கடற்றொழில் உள்ளிட்ட அனைத்து துறைகள் தொடர்பாகவும் மக்களை அறிவூட்டுவது “ஹரித” தொலைக்காட்சியின் அடிப்படை எண்ணக்கருவாகும்.  

இந்த “ஹரித” தொலைக்காட்சி அலைவரிசை கங்காராம விகாரையுடன் இணைந்த ஸ்ரீ ஜினரத்ன கல்வி பரிபாலன சபையினால் வடிவமைக்கப்பட்டுள்ளது.   பிரித் பாராயணத்திற்கு மத்தியில் ஜனாதிபதியின் தலைமையில் தொலைக்காட்சி அலைவரிசை ஆரம்பித்து வைக்கப்பட்டது.  

ஜனாதிபதியினால் “ஹரித” இணையத்தளமும் (www.harithatv.com) கருப்பொருள் பாடலும் வெளியீட்டு வைக்கப்பட்டது.  

மரக்கன்றுகளை விநியோகிக்கும் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் வகையில் சங்கைக்குரிய கிரிந்தே அஸ்ஸஜி தேரர் ஜனாதிபதிக்கு மரக்கன்றொன்றை வழங்கினார். 

டயலொக் அலைவரிசை எண் 16மற்றும் பியோ டிவி அலைவரிசையின் 09ஊடாக ஹரித தொலைக்காட்சி அலைவரிசையை மக்கள் கண்டு களிக்க முடியும்.  

மகாநாயக்க, அனுநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகா சங்கத்தினர், ஏனைய சமயத் தலைவர்கள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ஒப் த எயார்போஸ் ரொஷான் குணதிலக்க ஆகியோரும் அமைச்சர்கள் தூதுவர்கள், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் அரசாங்க அதிகாரிகள், பாதுகாப்புத்துறை முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.      

Thu, 04/01/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை