மட்டக்களப்பு கிரானில் புத்தாண்டு தினத்தில் 15 ஏக்கர் காணியை 224 ஏழைகளுக்கு பகிர்ந்தளித்த பரோபகாரி

தனது பரம்பரை காணி 15ஏக்கரை 224ஏழைகளுக்கு பகிர்ந்ளித்து காணி உரிமையாளராக்கிய சம்பவம் மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராம புறங்களிலிருந்து வாழும்  காணி இல்லாமல் வாடகை வீட்டில் வாழ்பவர்கள், மாற்றுத் திறனாளிகள், பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு தனது சொந்த காணியை எந்த ஒரு பிரதிபலனும் எதிர்பாராது 224ஏழைகளின் வாழ்க்கைக்கு நிலத்தை வழங்கிய நிகழ்வு  மட்டக்களப்பிலுள்ள பலரை வியக்க வைத்துள்ளது.

இந்த காணியை வழங்கிய நன்கொடையாளர்  லவக்குமார் என்ற  பரோபகாரியாவார். இவர் மட்டக்களப்பிலுள்ள கிரான் பிரதேசத்தை சேர்ந்த சமூகப்பற்றாளரான குருசுமுத்து லவக்குமார்  என்பவராவார். தமிழ், சிங்கள  புத்தாண்டு தினத்தில் 224ஏழைகள் மனதில் நம்பிக்கையையும் உறுதியையும் ஏற்படுத்தியுள்ளது.

தனது காணி 15 ஏக்கரை பிரித்து கிரான் எத்தலை மேட்டுக்காடு பகுதியில் தானமாக பகிர்ந்தளித்துவிட்டு இக்காணி பெற்ற ஏழைகளின் பிள்ளைகளின் கல்வி, மேம்பாடு, பொருளாதார விருத்தி கருதி இன்னும் ஊக்குவிப்பதற்காக துணை நிற்பேன் என கூறி வழங்கினார். அத்தோடு காணி வழங்கிய பகுதியில் மக்கள் குடியேறி வசிக்கவும் அவர்களுக்கு தேவையான இறை வழிபாட்டு ஆலயங்களுக்கும், பாடசாலைகளுக்கும் தனித்தனியாக காணி பிரித்து கொடுத்து ஒரு மாதிரிக் கிராமத்தை உருவாக்கியுள்ள சமூக பற்றாளர் லவக்குமார் அவரது மகத்தான பணிக்கு பலரும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு குறூப் நிருபர்

Tue, 04/20/2021 - 18:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை