ரஞ்சனுடன் செல்பி எடுத்த ராஜகருணா M.P

அனுமதித்த அதிகாரி பணி நீக்கம்

சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா செல்பி எடுத்துக்கொள்வதற்கு இடமளித்தமைக்காக சிறைச்சாலை அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சிறைத்தண்டனை அனுபவித்துவரும் நிலையில் அவரை பார்க்கச்சென்ற ஹர்சன ராஜகருணா எம்.பி. அவருடன் இணைந்து செல்பி எடுத்துக்கொண்டுள்ளார்.

அதற்கு இடமளித்த அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் அதிகாரியே பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்றுமுன்தினம் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்குச் சென்ற ராஜகருணா எம்.பி. பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை சந்தித்த பின்னர் செல்பி எடுத்துக்கொண்டுள்ளார். அதுமட்டுமன்றி தாம் எடுத்த படங்களை முகநூலூடாக பிரசாரப்படுத்தியுமுள்ளார்.

ஹர்சன ராஜகருணா எம்.பி. தமது பாராளுமன்ற சிறப்புரிமையை மீறி செயற்பட்டுள்ள நிலையில் அவர் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சந்தேக நபரொருவருடன் செல்பி எடுத்துக்கொண்டமை தவறானதென்றும் அதே வேளை அதற்கு சந்தர்ப்பமளித்த அதிகாரி தொடர்பில் உடனடியாக ஆராயுமாறும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை சிறைச்சாலைகள் திணைக்களத்தின் உயரதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதங்கிணங்கவே மேற்படி அதிகாரியை பணிநீக்கம் செய்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 03/10/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை