அரசியல் பழிவாங்கல் விசாரணை; ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செல்லுபடியற்றதாக்க கோரி ரிட் மனு

அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

மனுவில் பிரதிவாதிகளாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன, ஆணைக்குழுவின் உறுப்பினர்களான சந்திரசிறி ஜயதிலக்க மற்றும் சந்திரா பெர்னாண்டோ, அந்த ஆணைக்குழுவின் செயலாளர் மற்றும் சட்ட மாஅதிபரின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனுதாரரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, மேற்படி மனுவில் அரசியல் பழிவாங்கல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவினால் விசாரணை செய்யப்பட்டுள்ள சில முறைப்பாடுகள்  சம்பந்தமாக  பொறுப்புக்கூற வேண்டிய நபராக தன் பெயரையும் குறிப்பிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் பழி வாங்கல் தொடர்பாக விசாரணை செய்த ஆணைக்குழுவானது விசாரணைகளை மேற்கொண்டுள்ள முறை முழுமையாக சட்டத்திற்கு முரணானது என தெரிவிக்கும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு மேலதிகமாக அது செயற்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 03/11/2021 - 08:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை