மத்ரஸா பாடசாலை விடயங்களில் தலையிட அரசுக்கு உரிமை உண்டு

எதிர்காலத்தில் இத்தகைய பாடசாலைகள் மீது கடுமையான நடவடிக்கை

கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல் பீரிஸ் தெரிவிப்பு

நாட்டில் ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் மத்ரஸா பாடசாலைகள் முன்னெடுத்துச் செல்லப்படுமானால் அதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்துக்கு முழுமையான உரிமையுண்டென கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதில் தலையிட வேண்டிய பொறுப்பும் கடமையும் அரசாங்கத்துக்கு உண்டு என சுட்டிக்காட்டியுள்ள பேராசிரியர் ஜீ. எல்.பீரிஸ் அது தொடர்பில் தீர்மானமொன்றை மேற்கொள்வதற்கு தமக்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை நெலும் மாவத்தையிலுள்ள பொது ஜன பெரமுன அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர் பீரிஸ்;

நாட்டில் சுமார் இரண்டாயிரம் மத்ரஸா பாடசாலைகள் செயற்பட்டு வருகின்றன. அந்தப் பாடசாலைகளில் என்ன கற்பிக்கப்படுகின்றது? யார் கற்பிக்கிறார்கள் ? போன்றவற்றை ஆராய்வதற்காக கடந்த நல்லாட்சி அரசாங்கம் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.

அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. கடந்த காலத்தில் வெளிநாடுகளிலிருந்து 600 பேர் மத்ரஸா பாடசாலைகளில் கற்பிப்பதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். பாதுகாப்புச் செயலாளராக தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி வகித்த காலத்தில் அவ்வாறு இங்கு அவர்கள் வருவதற்கு இடமளிக்கப்படவில்லை.

அக்காலத்தில் புலனாய்வு ப் பிரிவினருக்கும் குடிவரவு, குடியகல்வு அதிகாரிகளுக்குமிடையில் சிறந்த தொடர்புகள் இருந்தன.

இத்தகைய நிறுவனங்களுக்கு இலங்கை வந்து கற்பிப்பதற்கு எவராவது விசா அனுமதிப் பத்திரம் கோருவார்களானால் அவர்களின் வரலாற்று விபரங்கள் அப்போது தேடிப்பார்க்கப்பட்டன. எனினும் நல்லாட்சி அரசாங்கத்தில் அந்த நடவடிக்கை இரத்துச் செய்யப்பட்டிருந்தது. அத்தகையோருக்கு விமான நிலையத்திலேயே விசா பெற்றுக் கொடுப்பதற்கு அந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

எந்தக் கேள்வியும் கேட்காமல் விசாரணையும் மேற்கொள்ளாமல் உடனடியாக அவர்களுக்கு விமான நிலையத்தில் விசா அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டது. அதுவே பெரும்பாலான பிரச்சினைகளுக்கு காரணமாகியுள்ளது.

இது போன்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது சட்டத்துக்கு விரோதமானதென எதிர்க்கட்சி எம்.பியும் நல்லாட்சி அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சருமான ஒருவர் தெரிவித்து வருகிறார். இந்த நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது எந்த விதத்திலும் சட்டவிரோதமாகாது.

நாட்டில் குரோதத்தையும் சந்தேகத்தையும் விதைக்கும் வகையில் நாட்டின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக மேற்படி மத்ரஸா பாடசாலைகள் நடத்தப்படுமானால் அதில் தலையிடுவதற்கு அரசாங்கத்திற்கு உரிமை உள்ளது.

அதுமட்டுமின்றி அது அரசாங்கத்தின் கடமையுமாகும். அந்த நிலையிலேயே அது தொடர்பில் தீர்மானமொன்றை மேற்கொள்ளுமாறு அரசாங்கம் எமக்கு உத்தரவிட்டுள்ளது என்றும் அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார். (ஸ)

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 03/16/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை