புதிய அரசியலமைப்பின் ஆரம்ப வரைவு அரசிடம்

இம்மாத இறுதிக்குள் ஒப்படைப்பு

புதிய அரசியலமைப்பின் ஆரம்ப வரைவு இந்த மாத இறுதியில், அதனை ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவினால் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது. புதிய அரசியலமைப்பு சபையை உருவாக்குவதற்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதி சட்டத்தரணி ரோமெஷ் டி சில்வா தலைமையில் குறித்த நிபுணர் குழு நியமிக்கப்பட்டிருந்தது. சட்டத்தரணிகளான மனோஹர டி சில்வா, காமினி மாரபன, சஞ்சிவ ஜயவர்தன, சமந்தா ரத்வத்தேவும் பேராசிரியர்களான நஷீமா கமர்தீன், ஜீ.எச்.பீரிஸ், வசந்த செனவிரத்னவும் கலாநிதி ஏ.சர்வேஸ்வரனும் அந்த குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். குறித்த காலப்பகுதியில் இந்த குழுவால் அனைத்து கட்சி தலைவர்கள், சமையத்தலைவர்கள, சிவில் அமைப்புக்கள் உள்ளிட்ட பல தரப்பினரின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளும் பெறப்பட்டிருந்தன.

பின்னர் அந்த யோசனைகளை விரிவாக ஆராய்ந்து சில வாரங்களுக்கு முன்னர் சட்டமூலம் தயாரிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்த மாத இறுதியுடன் நிபுணர் குழுவின் உத்தியோகபூர்வ காலம் நிறைவடையவுள்ளதுடன் அதற்கு முன்னர் புதிய அரசியலமைப்பின் வரைவு, நீதியமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளது. பின்னர் அந்த வரைவு, அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டு நீதி சட்டமூல திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அதன் பின்னரே புதிய அரசியலமைப்பின் வரைவு பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

Mon, 03/08/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை