புலிகளுக்கு ஆதரவான எவருடனும் பேச்சில்லை

அரசு கலந்துரையாடலை மேற்கொள்ளாது- உதய கம்மன்பில

புலிகளுக்கு ஆதரவாக செயற்படுபவர்களுடன் அரசாங்கம் எந்த கலந்துரையாடல்களையும் மேற்கொள்ள மாட்டாது.

இலங்கையை துண்டாடுவதற்காக வெளிநாடுகளிலிருந்து செயற்படுவதாலே சிலர் தடைசெய்யப்பட்டுள்ளதாக இணை அமைச்சரவை பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவுக்கும் ஊடக மாநாட்டிலே அவர் இவ்வாறு கூறினார்.

புலம்பெயர் (டயஸ்போரா) அமைப்புகள் பலவற்றை அரசாங்கம் தடைசெய்துள்ளமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் , யூதர்கள் வெளியேற்றப்பட்ட போது டயஸ்போரா என்ற பதம் பயன்படுத்தப்பட்டது.

அதுபோன்று இங்கு யாரும் வெளியேற்றப்படவில்லை. டயஸ்போரா என்பது இங்கு பொருந்தாது.

வெளிநாடுகளிலுள்ள இலங்கை சமூகங்களுடன் தேவையான கலந்துரையாடல்களை அரசு செய்து வருகிறது. எல்.ரீ.ரீ.ஈ இலங்கையில் தடைசெய்யப்பட்ட அமைப்பு.

நாட்டை துண்டாடுவதற்கு அரசியலமைப்பில் இடமில்லை. யாராவது எந்த நாட்டில் இருந்தாவது புலிகளின் நிலைப்பாட்டை ஆதரிப்பவர்களையும் நாட்டை துண்டாடுவதற்கு ஊக்கம் அளிப்பவர்களையும் அரசாங்கம் தடை செய்யும்.

அவர்களுடன் எந்த கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளாது. வெளிநாடுகளில் வாழ்வதற்காக அன்றி இலங்கையை துண்டாடுவதற்காக வெளிநாடுகளில் இருந்து செயற்படுவதாலே அவர்கள் தடைசெய்யப்பட்டுள்ளார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.(பா)

ஷம்ஸ் பாஹிம்

Wed, 03/31/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை