புர்கா தடை விடயத்தில் இதுவரை இறுதித் தீர்மானம் எதுவுமில்லை

சுமுகமாக தீர்க்க அரசு நிதானமாக முடிவு காணும்

புர்கா தடை தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இதுவரையில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை. இவ்விடயத்தை மத ரீதியானதாக மாத்திரம் அவதானிக்கக் கூடாது. தேசிய பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டு அவதானிக்க வேண்டுமென அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், புர்கா தடை விவகாரத்தை மத ரீதியான விடயமாக மாத்திரம் பார்க்கக் கூடாது. தேசிய பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டு அவதானிக்க வேண்டும். ஐந்து நட்சத்திர ஜனநாயக நாடுகள் கூட புர்காவுக்கு தடை விதித்துள்ளன. அவ்வாறான நாடுகள் தேசிய பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளன. உலகில் இதுவரையில் 16 நாடுகள் புர்காவுக்கு தடை விதித்துள்ளன.

அவற்றில் 03 முஸ்லிம் நாடுகளும் உள்ளடங்குகின்றன. எனவே, இது இலங்கையில் மாத்திரம் வரையறுக்கப்பட்டதொன்றல்ல. எவ்வாறிருப்பினும் இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் தொடர்ந்தும் கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருகிறது. ஆரம்ப காலங்களில் முகத்தை முழுமையாக மறைக்கும் வகையிலான ஆடை கலாசாரம் காணப்பட்டது. எனினும் தற்போது கலாசார மாற்றத்துடன் அவற்றிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே இது தொடர்பில் சுமுகமான நடவடிக்கைகள் நிதானமாக முன்னெடுக்கப்படும் என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம், சுப்பிரமணியம் நிசாந்தன்

Thu, 03/25/2021 - 07:16


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை