ஊருக்குள் நுழைய முற்பட்ட யானைக் கூட்டங்கள்; விரட்டியடிக்க வனஜீவராசி அதிகாரிகள் பெரும் முயற்சி

நூற்றுக்கணக்கான (188) யானை கூட்டம் அறுவடை செய்யப்பட்ட வயல்களில் வைக்கப்பட்ட தீ காரணமாக மக்கள் குடியிருப்புகளை நோக்கி நடமாடுவதனால் அவற்றை விரட்டுவதற்காக வனவிலங்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் ​நேற்று முன்தினம் மாலை திடீரென சம்மாந்துறை ஊடாக காரைதீவு, மாவடிப்பள்ளி, நிந்தவூர், பகுதிகளை ஊடறுத்து ஊருக்குள் பிரவேசிக்க முயன்ற சுமார் 188 க்கும் அதிமான யானைகளை கட்டுப்படுத்தி அவ்விடத்தில் இருந்து அகற்றுவதற்காக துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மாலை முதல் இரவு வரை யானைகள் கூட்டம் நகர்ந்து செல்லாமல் ஒரு இடத்தில் கூடி நிற்கின்றமை மற்றும் கலவரப்பட்டமை தொடர்பில் வனவிலங்கு அதிகாரிகளுக்கு பொதுமக்களால் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவ்விடத்திற்கு வந்த வனவிலங்கு அதிகாரிகள் யானைகளை விரட்டியடித்தனர்.

யானைக்கூட்டத்தை பார்வையிட மாவடிப்பள்ளி பாலம், காரைதீவு, நிந்தவூர், சம்மாந்துறை, பகுதிகளில் பொதுமக்கள் குவிந்து நின்று அவதானிப்பதை காணமுடிந்தது.

இது தவிர குறித்த நிலைமைகளை ஆராய்ந்து வனஜீவராசிகள் வளங்கள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்கவும் உடனடியாக நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார்.மேலும் இப் பிரதேசத்தில் அண்மையில் வேளாண்மை அறுவடை மேற்கொள்ளப்பட்ட நிலையில் தீ வைக்கப்படுவதனாலும் அங்கு கொட்டப்படும் குப்பைகளை தினந்தோறும் 100க்கும் மேற்பட்ட யானைகள் உண்ணுவதற்கு வருகை தருவதுடன் அருகில் உள்ள பொதுமக்களின் உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Sat, 03/20/2021 - 20:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை