மகஜரை ஏற்க மறுத்த பூநகரி பிரதேச சபை

இரணைதீவில் கொரோனா சடலங்கள் அடக்கம் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழங்கப்பட்ட மகஜரை ஏற்க பூநகரி பிரதேச சபை மறுத்துள்ளது.

கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் சடலங்களை இரணைதீவில் புதைப்பது தொடர்பில் மீள் பரிசீலணை செய்யுமாறு தெரிவித்து, மன்னார் சமூக பொருளாதார அபிவிருத்தி நிறுவனம் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், இரணைதீவு மக்கள் இணைந்து அரச திணைக்களங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு மகஜர்களை வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை 11மணியளவில் பூநகரி பிரதேச சபையினருக்கு மகஜரை வழங்குவதற்காக குறித்த குழுவினர் சென்றுள்ளனர்.

இதன்போது, குறித்த மகஜரை ஏற்றுக்கொள்வதற்கு பிரதேச சபையினர் முன்வரவில்லை என்றும் பொறுப்பு வாய்ந்த தரப்பினரான பிரதேச சபை தவிசாளர் மற்றும் செயலாளர் ஆகியோருடன் ஊழியர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்ட போதிலும் அதனை ஏற்றுக்கொள்வதற்கு அவர்கள் மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், முக்கிய பொறுப்பில் உள்ள பிரதேச சபை பொதுமக்கள் விடயம் சார்ந்து பொறுப்புணர்வுடன் செயற்படவில்லை என மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

பரந்தன் குறூப் நிருபர்

 

Thu, 03/04/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை