மன்னாரிலிருந்து கண்டி நோக்கி நேற்று (19) காலை இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்சில் பயணித்த வயோதிபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். மன்னார் புதிய பஸ் தரிப்பிடத்திலிருந்து இலங்கை போக்குவரத்து சபை பஸ் நேற்றுக் காலை 5.30 மணியளவில் பயணிகளுடன் கண்டி நோக்கி புறப்பட்டது.
இதன் போது அந்த பஸ்சில் வயோதிபரும் பயணித்துள்ளார். மன்னார் பிரதான பாலத்தடியிலுள்ள இராணுவ சோதனைச்சாவடியில் பஸ் சோதனைக்காக நிறுத்தப்பட்டபோதே வயோதிபர் இருக்கையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார். உடனடியாக இவரது சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலதிக விசாரணைகளை வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் குறூப் நிருபர்
Sat, 03/20/2021 - 07:18
from tkn