தமிழ் புகலிடக் கோரிக்கையாளரை திருப்பியனுப்புவதை கைவிட வேண்டும்

- ஜேர்மன் அரசுக்கு கஜேந்திரகுமார் கடிதம்

தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை இலங்கைக்கு நாடு கடத்தும் திட்டத்தை ஜேர்மன் அரசாங்கம் உடனடியாக கைவிடவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜேர்மன் அரசாங்கத்திற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மார்ச் 30ம் திகதி புகலிடக் கோரிக்கையாளர்களான பெருமளவு இலங்கை தமிழர்களை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு ஜேர்மன் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அறிந்து நாங்கள் பெரும் மனக்கலக்கம் அடைந்துள்ளோம்.

ஜேர்மனியில் உள்ள தமிழ் சமூகத்திற்கு இது ஏற்படுத்தக்கூடிய அச்சத்திற்கு அப்பால் இலங்கையில் இடம்பெற்ற இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற மனித உரிமை மீறல்களிற்கு தீர்வை காண்பதற்கான சர்வதேச சமூகத்தின் நடவடிக்கைகள் மீதும் இது கடும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஜேர்மனி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கும் தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கிய ஒருவார காலத்திற்குள் அந்த அரசாங்கத்திடமிருந்தே புகலிடம் கோரும் புகலிடக் கோரிக்கையாளர்களை அந்த அரசாங்கத்தின் கரங்களில் ஒப்படைப்பதற்கு ஜேர்மனி முயல்வது முற்றிலும் எதிர்மாறான செய்தியை தெரிவிப்பதாக அமையும்.

இதன் காரணமாக புகலிடக் கோரிக்கையாளர்களின் உயிர்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இந்த தவறான முடிவை உடனடியாக மீள் பரிசீலனை செய்து, ஜேர்மன் அரசாங்கம் இந்த விடயத்தை உடனடியாக கைவிடவேண்டும்.

வவுனியா விசேட நிருபர்

 

Mon, 03/29/2021 - 14:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை