சம்மாந்துறையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போ வேறு இடத்திற்கு இடமாற்றப்பட உள்ளதாக வெளியான தகவலையடுத்து, அது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டு டிப்போவை அவ்விடத்திலேயே நிரந்தரமாக வைக்குமாறு கோரி சம்மாந்துறை இளைஞர்கள் நேற்று (16) சாலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுலோகங்களை ஏந்திக்கொண்டு கோஷங்களை எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள் தீர்வு கிடைக்கும் வரை போராடப்போவதாக அறிவித்துள்ளனர்.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், மிகப்பெரிய பிரதேசமான சம்மாந்துறைக்கு அந்த டிப்போ இருப்பதன் மூலம் பல நன்மைகள் இருப்பதாகவும், இவ்விடத்திலிருந்து டிப்போ அகற்றப்படுமானால் சம்மாந்துறை மக்கள் போக்குவரத்து அசௌகரியங்களை அனுபவிப்பார்கள் எனவும் கருத்துக்களை வெளியிட்டனர்.
இந்த விடயம் தொடர்பில் அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காசிம், எம்.எஸ்.தௌபீக், சம்மாந்துறை மஜ்லிஸ் அஷ்ஷுறா அமைப்பினர் சம்பந்தப்பட்ட தரப்பினரை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
(சாய்ந்தமருது தினகரன், சம்மாந்துறை கிழக்கு தினகரன் நிருபர்கள்)
from tkn