அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தில் மூன்று வெவ்வேறு மசாஜ் நிலையங்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஆறு ஆசிய நாட்டு பெண்கள் உட்பட எட்டுப் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற இந்தத் தாக்குதல்களில் அட்லாண்டாவின் வடக்கு புறநகர் பகுதியில் இருந்து மசாஜ் நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டனர். மேலும் இரு நிலையங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் நால்வர் பலியாகினர்.
இந்த மூன்று தாக்குதல்களையும் நடத்திய சந்தேகத்தில் 21 வயது இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் இந்தத் தாக்குதலுக்கான பின்னணி பற்றி உறுதி செய்யப்படவில்லை.
கொரோனா தொற்றை பரப்புவதாக ஆசிய அமெரிக்கர்கள் மீதான வெறுப்புப் பிரசாரம் அண்மைய மாதங்களில் அமெரிக்காவில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த வாரம் ஆற்றிய உரை ஒன்றிலும் இந்த வெறுப்புப் பிரசாரங்களை கண்டித்திருந்தார். “ஆசிய அமெரிக்கர்களுக்கு எதிராக கொடிய வெறுப்புக் குற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. அவர்கள் தாக்குதல், தொந்தரவு, குற்றச்சாட்டு மற்றும் பழி சுமத்தலுக்கு முகம்கொடுக்கிறார்கள்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
from tkn