வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் எட்டாவது நாளாக உண்ணாவிரதம்

- மயங்கிய நிலையில் சிலர் வைத்தியசாலையில்

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் தொடர்ந்து 8வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் நேற்று யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதி மற்றும் ஆளுநர் செயலக நுழைவாயில்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 

இதனால் போக்குவரத்து சில மணிநேரம் தடைப்பட்டிருந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வருகைதந்த யாழ்ப்பாண காவல்துறையினர் மாற்று வீதியால் பயணத்தை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் மற்றும் சாரதிகளிடம் தெரிவித்தனர். 

போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களில் சிலர் மயக்கமடைந்து விழுந்த நிலையில் உடனடியாக எம்பியூலன்ஸ் வண்டி மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். 

அத்தோடு உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்த பெண் சுகாதார தொண்டர் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் நேற்றுக் காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

கடந்த முதலாம் திகதியில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டுவந்த வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் தமக்கான தீர்வு வழங்காத நிலையில் கடந்த 8ஆம் திகதி தொடக்கம் தமது போராட்ட வடிவத்தை உண்ணாவிரத போராட்டமாக மாற்றி முன்னெடுத்து வருகின்றனர். 

போராட்டம் இடம்பெறுகின்ற இடத்திற்கு ஒரு சில தமிழ் அரசியல் பிரதிநிதிகள் வருகை தந்திருந்த போதிலும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் இதுவரை வருகை தரவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

Tue, 03/16/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை