ஏப்ரலில் உயர்தர முடிவு, ஜூனில் சாதாரணதர முடிவு வெளியாகும்

- அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்

ஏப்ரல் மாத முற்பகுதியில் கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளையும் ஜூன் மாதத்தில் சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடவும் எதிர்பார்த்துள்ளதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ . எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.  அதற்கிணங்க உயர்தரத்தில் சித்தி பெற்றவர்கள் பல்கலைக்கழக அனுமதியை பெற்றுக் கொள்வதில் தற்போது நடைமுறையில் உள்ள ஒன்றரை வருட காலத்தை முடிந்தளவு குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

கடந்த வருடம் நடைபெற்ற கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரலில் வெளியிடப்படவுள்ள நிலையில் பல்கலைக் கழகத்துக்கு தகுதி பெறும் மாணவர்களை செப்டம்பர் மாதத்தில் உள்ளீர்ப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

அதேவேளை தாமதமின்றி மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை நிறைவு செய்யும் வகையில் அதற்கான முறைமை ஒன்றை தயாரிக்குமாறு கல்வியமைச்சர் அமைச்சு உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார். 

அதேவேளை தற்போது நடைபெற்று வரும் கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை எதிர்வரும் ஜூன் மாதத்தில் வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அந்த மாணவர்களுக்கான உயர்தர வகுப்பு கல்வி நடவடிக்கை ஜூலை மாதத்தில் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

எவ்வாறாயினும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கான காலம் வீணடிக்கப்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.(ஸ) 

லோரன்ஸ் செல்வநாயகம் 

 

Tue, 03/02/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை