வடக்கில் பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்க பூர்வாங்க ஏற்பாடுகள் பூர்த்தி

- மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்

வடமாகாணத்தில் இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் 563பேரும், பெப்ரவரி மாதத்தில் 278பேரும்  கொரோனா தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பெப்ரவரி மாதத்தில் யாழ்.மாவட்டத்தில் 128பேரும், மன்னார் மாவட்டத்தில் 85பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 44பேரும், வவுனியா மாவட்டத்தில் 14பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 7பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் யாழ்.மாவட்டத்தில் யாழ்ப்பாண சிறைச்சாலையில் 61கைதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். வடமாகாணத்தில் பெப்ரவரி மாதத்தில் 16ஆயி்த்து 427பேரிடம் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 11ஆயிரத்து 126பரிசோதனைகளும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் 5ஆயிரத்து 301பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று ஆரம்பித்த கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் இன்று வரை வடமாகாணத்தில் ஆயிரத்து 89பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 349பேர் யாழ்ப்பாணம் மாவட்டத்திலும், 376பேர் வவுனியா மாவட்டத்திலும், 267பேர் மன்னார் மாவட்டத்திலும், 78பேர் கிளிநொச்சி மாவட்டத்திலும், 19பேர் முல்லைத்தீவு மாவட்டத்திலும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதுவரை வடமாகாணத்தில் கொரோனா தொற்றால் 5இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன. மன்னார் மாவட்டத்தில் 3இறப்புக்களும், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தலா ஒவ்வொரு இறப்புக்களும் ஏற்பட்டுள்ளன. வடமாகாணத்தில் 8ஆயிரத்து 636சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதுடன் தனியார்துறை மருத்துவப் பணியாளர்கள், மருத்துவபீட விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் யாவும் மேற்கொள்ளப்பட்டுள்ளன  என்றுள்ளது.

சுண்டுக்குளி நிருபர்

 

 

Wed, 03/03/2021 - 14:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை