ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இலங்கை - பங்களாதேஷ் கைச்சாத்து

இலங்கைக்கும் பங்களாதேஷிற்கும் இடையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவின் விஜயத்தின் போது இந்த உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இலங்கைக்கும் பங்களாதேஷிற்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை இரு நாட்டு பிரதமர்களின் தலைமையில் நடைபெற்றது.

இளைஞர் விவகார மேம்பாடு, விவசாயத்துறை, திறன் அபிவிருத்தி பரிமாற்றம், சுகாதார தாதிகள் சேவை பரிமாற்றம், அனைத்துலக ஒத்துழைப்பு கல்வி மற்றும் 2021/-2025 வரையிலான அனைத்து கலாசார பரிமாற்ற செயற்றிட்டம் ஆகிய விடயங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

COVID-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா இதன்போது தமது பாராட்டினை தெரிவித்ததாக பிரதமரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது பொருளாதாரம், முதலீடு, சந்தை, தொழில்நுட்பம், விவசாயம், கடற்றொழில் கைத்தொழில் மற்றும் அரசியல் உறவு ஆகியவற்றைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளினதும் மத்திய வங்கிகளுக்கு இடையில் புரிந்துணர்வை தொழில்நுட்ப ரீதீயில் மேம்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவின் 50 ஆவது வருட ஆரம்பத்தை முன்னிட்டு இரு நாடுகளுக்கும் இடையில் விரிவுபடுத்தப்பட்ட அரசியல் உறவுகளை பலப்படுத்துவது தொடர்பிலான யோசனைகள் இதன்போது பரிமாற்றிக்கொள்ளப்பட்டன.

பிரதமருடன் பங்களாதேஷ் சென்றுள்ள கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் பங்களாதேஷின் மத்திய வங்கி ஆளுநரை சந்தித்தார்.

இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ராலும் இதன்போது இணைந்துகொண்டிருந்தார்.

Mon, 03/22/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை