பாராளுமன்றத்தில் 23 ஆம் திகதி அரசாங்கம் விசேட அறிவிப்பு

எதிரணியினரின் கேள்விகளுக்கும் பதில் - கப்ரால்

நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட சீனியில் பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளதாக அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில், அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் நிதி அமைச்சின் சார்பில் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் எதிர்வரும் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார்.

அந்த அறிவிப்பின் பின்னர் எதிர்க்கட்சியினர் கேட்கும் சகல கேள்விகளுக்கும் தான் பதிலளிப்பதாகவும், மிகச் சரியான தகவலே பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சீனிக்கான வரி குறைப்பின் மூலமாக அரசாங்கத்துக்கு தேவையான சில வர்த்தகர்களுக்கே நன்மை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், வரிகுறைப்பு இடம்பெற்ற காலப்பகுதியில் அந்த ஒரு நிறுவனம் மாத்திரம் கடந்த நவம்பர் மாதத்தில் 26 ஆயிரம் மெற்றிக் தொன் சீனி இறக்குமதி செய்திருக்கின்றதெனவும் பிரதான எதிர்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகின்றன.

இவ்வாறான வரி குறைப்பின் மூலம் அரசாங்கத்துக்கு கிடைத்துவந்த இலாபம் கிடைக்காமல் போனதால் 15.9 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக நிதி அமைச்சு பாராளுமன்ற 'கோபா' குழுவுக்கு அறிவித்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன் சதொச நிறுவனம் கடந்த ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி ஒரு கிலோ சீனியை 127.49 என்ற அடிப்படையில் 700 மெற்றிக் தொன் தொன்கள் பெற்றுக்கொண்டு ஒரு கிலோ சீனியை 85 ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.

இந்நிலையில் அரசாங்கம் தொடர்ச்சியாக இந்த குற்றச்சாட்டை நிராகரித்து வருகின்றது. இக் காலப்பகுதியில் அரசாங்கம் சீனி இறக்குமதி செய்த விதிமுறை எவ்வாறானது, அதனால் கிடைத்த வருமானம் மற்றும் முறைகேடுகள் இடம்பெறாத வகையில் எவ்வாறு இதனை கையாண்டோம் என்பது குறித்து நிதி அமைச்சு தற்போது அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளது. இந்நிலையில் இந்த அறிக்கையையும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும் அறிவிக்கும் விதமாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், எதிர்வரும் 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார்.

சுப்பிரமணியம் நிசாந்தன்

Sat, 03/20/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை