நோர்வூட்டில் மினி சூறாவளி: 23 குடியிருப்புகளுக்கு சேதம்

பாதிக்கப்பட்ட வீடுகளை புனரமைக்க ஏற்பாடு

நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட டிக்கோயா பட்டல்கலை மேற்பிரிவு தோட்டத்தில் நேற்று முன்தினம் (07) மாலை வீசிய மினி சூறாவளி காரணமாக 23 குடியிருப்புக்கள் சேதமடைந்துள்ளன.

கடும் காற்று காரணமாக இந்தத் தோட்டத்திலுள்ள தொடர் குடியிருப்புகளின் கூரைகள் காற்றினால் அள்ளுண்டு சென்றுள்ளன. இதனால் இந்த குடியிருப்பிலுள்ள 16 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதே நேரம் குறித்த பகுதியில் பாரிய கருப்பன் தைலம் மரம் ஒன்று முறிந்து வீடுகளின் மேல் வீழ்ந்ததன் காரணமாக ஒரு வீட்டின் ஒரு பகுதி முற்றாக உடைந்ததுடன், ஏனைய இரண்டு வீடுகளின் கூரைத்தகடுகள் சேதமடைந்துள்ளன. இதே பகுதியில் அமைந்துள்ள மற்றுமொரு தொடர்மாடிக் குடியிருப்பில் ஒரு சில வீடுகளின் கூரை சேதமடைந்துள்ளன.

குறித்த பகுதியில் சுமார் 50 மேற்பட்ட மரங்கள் மினி சூறாவளி காரணமாக முறிந்து வீழ்ந்துள்ளமையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன. நேற்று (08) சம்பவ இடத்திற்கு சென்ற நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே. ரவி, பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டுள்ளார்.

இதன்போது, பாதிக்கப்பட்ட வீடுகளை புனரமைப்புக்காக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் கவனத்திற்கு கொண்டு சென்று, மனித வள அபிவிருத்தி நிதியத்தின் ஊடக நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஹற்றன் விசேட நிருபர்

Tue, 03/09/2021 - 06:52


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை