கொவிட்–19: ஏழு வாரங்களில் முதல்முறையாக அதிகரிப்பு

கடந்த ஏழு வாரங்களில் முதல் முறை உலகெங்கும் கொரோனா தொற்று சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இதனால் இந்த ஆண்டு இறுதியில் இந்த பெருந்தொற்றை ஒழிக்கும் எதிர்பார்ப்பு சாத்தியமற்ற ஒன்றாக மாறி இருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

“ஏழு வாரங்களில் முதல் முறையாக கடந்த வாரத்தில் கொவிட்–19 தொற்று சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அமெரிக்காஸ், ஐரோப்பா, தென் கிழக்கு ஆசியா மற்றும் கிழக்கு மத்தியதரை ஆகிய உலக சுகாதார அமைப்பின் ஆறில் நான்கு பிராந்தியங்களில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இது ஏமாற்றம் அளித்தபோதும் ஆச்சரியத்திற்கு உரியதல்ல” என்று உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதனொம் கெப்ரியேசுஸ் தெரிவித்தார்.

நோய் எதிர்ப்புக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டாம் என உலக நாடுகளை அவர் கேட்டுக்கொண்டார். தடுப்பூசித் திட்டத்தை மட்டுமே நாடுகள் சார்ந்திருக்க இயலாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அடிப்படைப் பொதுச் சுகாதார நடவடிக்கைகளே, வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான அடித்தளம் என்று அவர் வலியுறுத்தினார்.

உலகெங்கும் கொரோனா தொற்று சம்பவங்கள் 114 மில்லியனைத் தாண்டி இருப்பதோடு 64.5 மில்லியன் நோயாளர்கள் குணமடைந்துள்ளனர். நோய்த் தொற்றினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2.5 மில்லியனாக உயர்ந்துள்ளது.

Wed, 03/03/2021 - 11:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை