வட மாகாண சுகாதார தொண்டர்கள் ஏ- 09 வீதியை மறித்து போராட்டம்

வடமாகாண சுகாதார தொண்டர்கள் யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாக ஏ 09 பிரதான வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக பிரதான வீதியின் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டிருந்தன. போக்குவரத்தைச் சீர்செய்ய யாழ். மாம்பழம் சந்தியிலும் கச்சேரி - நல்லூர் வீதியிலும் பொலிஸார் மாற்றுப் பாதைகளில் வாகனங்களை அனுப்பினர்.

தமக்கு வழங்கப்பட்ட நிரந்த நியமனம் இடைநிறுத்தப்பட்டதையடுத்து அதனை மீளப் பெற்று தருமாறு கோரி வடமாகாணத்தைச் சேர்ந்த சுகாதார தொண்டர்கள் மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக கடந்த முதலாம் திகதி தொடக்கம் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது போராட்டம் உணவு தவிர்ப்பு போராட்டமாக விரிவாக்கமடைந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று அவர்கள் ஏ 09 வீதியை மறித்து வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2019ஆம் ஆண்டு ஆண்டு அப்போதைய ஆளுநர் எடுத்த முயற்சியின் பயனாக வட மாகாண சுகாதாரத் தொண்டர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கப்பட்டது. எனினும் அந்த நியமனத்தில் முறைகேடு இடம்பெற்றதாக பாதிக்கப்பட்ட சுகாதார பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக நியமனங்கள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டன.

நிரந்தர நியமன கடிதம் பெற்ற சுகாதார பணியாளர்கள் 454 பேர் தமக்குரிய தீர்வை வழங்குமாறு கோரியே வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணம் குறூப் நிருபர்

Fri, 03/12/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை