சர்வதேசத்தில் அரசை நெருக்கடிக்குள் தள்ளும் செயற்பாடுகளில் சிலர் தீவிரம்

அரசையும் தேசிய வளத்தையும் பாதுகாக்க பின்நிற்கமாட்டோம்

அரசாங்கத்தை சர்வதேச மட்டத்தில் நெருக்கடிக்குள்ளாக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தையும், தேசிய வளங்களையும் பாதுகாக்க தொடர்ந்து போராடுவோமென நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர் ,

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பாதுகாக்க முன்னெடுத்த போராட்டத்தில் வெற்றிப்பெற்றுள்ளோம்.அரசாங்கத்துக்கு எதிராக செயற்படவில்லை.

ஆட்சிக்கு வரும் முன் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தில் கூட்டணியமைத்துள்ள அனைத்து கட்சிகளுக்கும் உண்டு.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரத்தில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவரின் தலையீடு அநாவசியமானது. பிற நாடுகளின் அதிகார போட்டித்தன்மைக்கு இலங்கையை நெருக்கடிக்குள்ளாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அரசாங்கத்தையும் தேசிய வளங்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைத்து தரப்பினருக்கும் உண்டு.

நாட்டிலுள்ள தேசிய வளங்களை இலங்கை மக்கள் மாத்திரமே உரிமை கொண்டாட முடியும்.தேசிய வளங்களை பாதுகாப்பதற்கான போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம்.10 அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து முன்னெடுத்த போராட்டத்தினால் அரசாங்கத்துக்குள் எவ்வித முரண்பாடுகளும் தோற்றம் பெறவில்லை என்றார்.

பத்திக், கைத்தரி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர்- தயாசிறி ஜயசேகர கூறுகையில்,

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பூகோள அரசியல் தொடர்பில் கருத்துரைக்கும் தார்மீக உரிமை கிடையாது.

கொழும்பு துறைமுக கிழக்கு முனைய விவகாரத்தில் 2015 ஆம் ஆண்டு இவர் பொறுப்பற்ற வகையில் செயற்பட்டதன் காரணத்தால் இன்று இராஜதந்திர மட்டத்தில் முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய அபிவிருத்தி தொடர்பில் 2015ஆம் ஆண்டு சர்வதேசத்தில் துறைமுக நிர்மாணத்துறையில் முன்னணி வகித்த 07 நாடுகளுக்கிடையில் விலைமனு கோரல் விடுக்கப்பட்டது. 07 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட விலைமனு கோரல் பல்வேறு காரணிகளினால்03 தடவை மாற்றியமைக்கப்பட்டது.

இறுதியில் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையில் கைச்சாத்திடப்பட்டது.முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொறுப்பற்ற வகையில் செயற்பட்டதன் காரணமாக இந்தியாவுடன் தற்போது நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

அரசாங்கத்துக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுக்கவில்லை.அனைத்து தரப்பினரும் ஒன்றினைந்து கிழக்கு முனையத்தை பாதுகாத்துள்ளோம்.

மேல் முனையத்தை அரசாங்கம் தாரைவார்த்து விட்டதாக எதிர்த்தரப்பினர் குறிப்பிடும் குற்றச்சாட்டை ஏற்க முடியாது. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையவே பிரதானமானதென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Fri, 02/05/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை