முஸ்லிம்களின் சடலம் எரிக்கப்படுவதற்கு இனவாதமே பிரதான காரணம்

வெளிநாட்டு ஊடக செவ்வியில் சுமந்திரன் M.P

சுகாதாரத்திற்கு அவசியமானதென்ற எந்த நம்பிக்கையுடனும் உடல்களை கட்டாயமாக தகனம் செய்யும் கொள்கை பின்பற்றப்படவில்லை, மாறாக முற்றிலும் இனவாத அடிப்படையிலேயே இது முன்னெடுக்கப்படுகின்றது.

அரசாங்கத்தின் இந்த கொள்கை முஸ்லிம் சமூகத்தினரை பெருமளவிற்கு உலுக்கியுள்ளதென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியின்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களை பூமிக்கு ஒப்படைக்க வேண்டுமென்பது அவர்களின் அடிப்படை நம்பிக்கை என்பதால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களுக்கு இது மோசமான விடயமாகவுள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிலத்தடி நீர் மூலம் வைரஸ் பரவும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. முஸ்லிம் சமூகம் கொங்கிரீட் கல்லறைகள் போன்றவற்றில் உடல்களை வைப்பதற்கும் முன்வந்தது. ஆனால் அரசாங்கம் ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டுள்ளதால் அதனை உறுதியாக நிராகரித்துவிட்டது.

அரசாங்கம் அந்த நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்க விரும்பவில்லையென சுமந்திரன் தெரிவித்துள்ளார். உடல்களை அடக்கம் செய்வதற்கு மறுக்கும் நாடு நான் அறிந்த வகையில் இலங்கையே என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

 

Fri, 02/05/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை