ஹுனைஸ் பாரூக்கிடம் பொலிஸார் வாக்குமூலம்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்றமை தொடர்பாக வன்னி மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக்கிடம் நேற்று மன்னார் பொலிஸார் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.

அவரின் மன்னாரிலுள்ள அலுவலகத்துக்கு காலை 11.30 மணியளவில் சென்ற மன்னார் பொலிஸார் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.

இதன்போது நீதிமன்றக் கட்டளை மீறப்பட்டதா? கொரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையில், அது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதா? உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் கலந்து கொண்ட மன்னார் மாவட்டத்திலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், சட்டத்தரணிகள் உட்பட பல்வேறு தரப்பினரிடமும் கடந்த இரண்டு தினங்களாக மன்னார் பொலிஸார் வாக்குமூலங்களை பதிவு செய்து வருகின்றனர்.

தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள், முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு, தொல்பொருள் திணைக்களத்தினால் காணிகள் அபகரிப்பு உட்பட சிறுபான்மை மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில், எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் ஜெனீவா மனித உரிமை பேரவையின் கவனத்துக்கு இவற்றை கொண்டுவரும் வகையிலுமே வடக்கு, கிழக்கு சிவில் சமூகத்தினரால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Mon, 02/22/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை