மியன்மார் ஆட்சிக் கவிழ்ப்பு; உலக நாடுகள் கண்டனம்

மியன்மார் ஆட்சிக் கவிழ்ப்பு; உலக நாடுகள் கண்டனம்-Myanmar Military Coup

ஆங் சான் சூ கி உட்பட மியன்மாரின் ஆளும் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டு, ஆட்சி கவிழ்க்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உலக நாடுகள் தங்களது கண்டனங்களை வெளியிட்டுள்ளன.

இராணுவ சதிப்புரட்சி ஒன்றின் மூலம் அந்நாட்டு இராணுவம் நேற்று ஆட்சியை கைப்பற்றியது.

தேர்தல் மோசடி தொடர்பில் இந்த கைது நடவடிக்கைகள் இடம்பெற்றதாக குறிப்பிட்டிருக்கும் இராணுவம், இராணுவத் தளபதி மின் அவுங் ஹிலைங் இடம் அதிகாரம் கையளிக்கப்பட்டதாக அறிவித்துள்ளது.

இராணுவத்திற்கு சொந்தமான தொலைக்காட்சி சேவையில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பில் நாட்டில் ஓர் ஆண்டு காலத்திற்கு அவசர நிலை ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சூ கியின் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியின் பேஸ்புக் பக்கத்தில் இதனை உறுதி செய்தும் இராணுவ சதிப்புரட்சியை எதிர்த்தும் எழுதப்பட்டுள்ளது. இராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியதற்கு எதிராக மக்கள் போராட வேண்டும் என்று சூ கி அழைப்பு விடுத்துள்ளார்.

பர்மா என்று முன்னர் அழைக்கப்பட்ட மியன்மாரில் மேற்குலக ஆதரவில் ஜனநாயகம் நிறுவப்பட்டு சில ஆண்டுகளுக்கு பின்னரே மீண்டும் அங்கு இராணுவச் சதிப்புரட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது. அண்டை நாடான சீனாவும் மியன்மாரில் அதிக செல்வாக்கை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த நவம்பர் 8 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் சூ கியின் ஆளும் கட்சி அமோக வெற்றி பெற்ற பின் முதல்முறை பாராளுமன்ற அமர்வு இடம்பெறுவதற்கு சில மணி நேரம் இருக்கும் நிலையிலேயே இராணுவ ஜெனரல்கள் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

நவம்பர் தேர்தலில் சூ கியின் வெற்றி அவரது ஜனநாயக ஆதரவை வலுப்படுத்தும் ஒன்றாகவே பார்க்கப்பட்டது.

தலைநகர் நைபிடோவ் மற்றும் பிரதான வர்த்தக மையமாக உள்ள யங்கோனில் தொலைபேசி மற்றும் இணையதள இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருப்பதோடு அரச தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டு ஆளும் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சூ கி, மியன்மார் ஜனாதிபதி வின் மயின்ட் மற்றும் ஏனைய ஆளும் கட்சித் தலைவர்கள் நேற்றுக் காலை கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டதாக ஆளும் கட்சியின் பேச்சாளர் மியோ நியுன்ட் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

மற்றொரு பிராந்திய சட்டசபை உறுப்பினரான பா பா ஹன் கைது செய்யப்படும் வீடியோ ஒன்று பேஸ்புக்கில் வெளியாகியுள்ளது. இந்த கைதின்போது அவரது கணவர் இராணுவத்திடம் மன்றாடுவதும், குழந்தை ஒன்று அவரது மார்பில் கட்டிக்கொண்டு அழுவதும் அந்த வீடியோவில் தெரிகிறது.

மியன்மார் நாட்டின் பல்வேறு பிராந்தியத்தின் முதலமைச்சர்களும் கைது செய்யப்பட்டிருப்பதாக அவர்களின் குடும்பத்தினர்கள் கூறுகிறார்கள்.

தலைநகர் மற்றும் யங்கோன் வீதிகளில் துருப்புகள் நிலைநிறுத்தப்பட்டிருப்பதோடு மக்கள் பொருட்களை வாங்குவதற்கும், ஏ.டி.எம் இயந்திரங்களில் பயணத்தை பெறுவதற்கும் முண்டியடிப்பதை காண முடிவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இணையதள இணைப்பு இல்லாததால் வங்கிகள் தமது சேவைகளை இடைநிறுத்தியுள்ளன.

மியன்மாரில் தேர்தலுக்கு பின்னர் அந்நாட்டு இராணுவத்திற்கும் சிவில் அரசுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து இருந்தது.

2011 ஆம் ஆண்டு மின்மாரின் இராணுவ ஆட்சியாளர்கள் அதிகாரத்தை பகிர இணங்கியதை அடுத்து நடந்த இரண்டாவது தேர்தலிலேயே சூ கியின் கட்சி 83 வீத வாக்குகளை வென்றது.

எனினும் இந்தத் தேர்தல் முடிவை எதிர்த்து இராணுவம் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டமை குறிப்பிடத்தக்கது.

முன்கூட்டி பதிவு செய்யப்பட்ட சூ கியின் உரை ஒன்று ஆளும் கட்சி பேஸ்புக் பக்கத்தில் போடப்பட்டுள்ளது. அதில் இராணுவத்தின் இவ்வாறான செயல் மியன்மாரை மீண்டும் சர்வாதிகாரம் ஒன்றுக்கு இட்டுச் செல்லும் என்று எச்சரித்துள்ளார்.

“மக்கள் இதனை ஏற்றுக்கொள்ளக் கூடாது. இராணுவ சதிப் புரட்சிக்கு எதிராக முழு மனதுடன் எதிர்க்கவும் பதலளிப்பதற்கும் மக்களை நான் கேட்கிறேன்” என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இராணுவ சதிப்புரட்சியை இராணுவ ஆதரவாளர்கள் சிலர் கொண்டாடி வருகின்றனர். யங்கோன் வீதிகளில் அவர்கள் வாகனங்களில் அணிவகுப்பாக சென்று தேசிய கொடியை அசைத்து தமது மகிழ்ச்சியை வெளியிட்டு வருகின்றனர். மறுபுறம் ஜனநாயக ஆதரவு செயற்பாட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

“எமது நாடு ஒரு பறவையாக இருந்தது. அது பற்றப்பதற்கு கற்றுக்கொண்ட மாத்திரத்திலேயே இராணுவம் அதன் சிறகுகளை உடைத்துவிட்டது” என்று மாணவ செயற்பாட்டாளர் ஒருவரான சி து டுன் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகள் கண்டனம்

அமெரிக்கா மியன்மாரில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

“மியான்மாரின் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும். மியன்மார் மக்களின் ஜனநாயகம், சுதந்திரம், அமைதி, மேம்பாடு தொடர்பான விருப்பங்களுடன் அமெரிக்கா நிற்கிறது. அந்த நாட்டின் இராணுவம் தங்கள் நடவடிக்கைகளை உடனடியாக பின் வாங்க வேண்டும்” என அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிலிங்கென் கூறியுள்ளார்.

அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்திருக்கும் ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ், மக்களின் விருப்பை மதிக்கும்படி இராணுவத்தை வலியுறுத்தியுள்ளார்.

இந்தியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகள் மியன்மார் நிலைமை குறித்து கவலையை வெளியிட்டிருப்பதோடு மியன்மாருக்கான பிரதான நன்கொடை நாடாக இருக்கும் ஜப்பான் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ளது.

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற 75 வயதான ஆங் சான் சூ கி பல தசாப்தங்களாக வீட்டுக் காவலில் இருந்த நிலையில் 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தல் மூலமே ஆட்சிக்கு வந்தார். இராணுவத்திற்கு எதிரான அவரது போராட்ட சர்வதேச அளவில் அவரது புகழுக்குக் காரணமானது.

எனினும் 2017 ஆம் ஆண்டு ரொஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் காரணமாக சூ கியின் சர்வதேச புகழ் சீர்குலைந்தபோதும் உள்நாட்டில் அவர் அதிக செல்வாக்கு மிக்கவராக உள்ளார்.

Tue, 02/02/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை