கொரோனா தொற்றுக்கு எதிரான பைசர் தடுப்பூசி நோய்ப் பாதிப்பு மற்றும் உயிரிழப்பை கட்டுப்படுத்துவதில் 95.8 வீதம் செயல்திறன் கொண்டிருப்பதாக ஆய்வொன்றில் கண்டறியப்பட்டதை அடுத்து இஸ்ரேலில் முடக்கநிலை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
இதன்படி நேற்று முதல் கடைகள், நூலகங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டது. எனினும் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் தொடர்ந்தும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வழக்கமான வாழ்வுக்கு திரும்புவதன் முதல் கட்டமாக இது உள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தடுப்பூசி வழங்குவதில் உலகில் முன்னணியில் இருக்கும் நாடாக இஸ்ரேல் உள்ளது.
அங்கு 49 வீதமாக மக்கள் குறைந்தது ஒரு முறையேனும் தடுப்பூசியை பெற்றுள்ளனர்.
வைரஸ் தொற்று அதிகரித்ததை அடுத்து இஸ்ரேலில் கடந்த டிசம்பர் 27 ஆம் திகதி மூன்றாவது முறையாக பொது முடக்கம் அமுல்படுத்தப்பட்டது.
அது தற்போது தளர்த்தப்பட்டிருக்கும் நிலையில் மக்களுக்கு பல்பொருள் அங்காடிகள் மற்றும் மிருகக்காட்சி சாலை போன்று சுற்றுலாத் தளங்களுக்கு செல்ல முடியும்.
பைசர் தடுப்பு மருந்தை இரு முறை பெற்றுக்கொண்டவர்களில் நோய் அச்சுறுத்தல் 95 வீதம் குறைந்திருப்பதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு கடந்த சனிக்கிழமை தெரிவித்தது.
இந்தத் தடுப்பு மருந்து காய்ச்சல் மற்றும் சுவாசப் பிரச்சினையை தடுப்பதில் 98 வீதம் செயல்திறன் கொண்டது என்பது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
from tkn