விவசாயத்துறையை மேம்படுத்த தொழில்நுட்ப அறிவு பரிமாற்றம்

ஜனாதிபதி கோட்டாபய -பாக். பிரதமர் இம்ரான் கான் சந்திப்பில் இணக்கம்

சுற்றுலா, வர்த்தகம், தொழில்நுட்பத்துறை குறித்தும் ஆராய்வு

இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் விவசாயிகளுக்கு அதிக வருமானத்தையும் நுகர்வோருக்கு நிவாரண விலையையும் வழங்கும் வகையில் விவசாய பொருளாதாரத்தை மேம்படுத்துவதாக இரு நாட்டுத் தலைவர்களும் உறுதியளித்தனர். இதற்காக இரண்டு நாடுகளும் பரஸ்பரம் தமது, அறிவு மற்றும் தொழில்நுட்பத்தை பரிமாறிக் கொள்வதற்கும் இணக்கம் தெரிவித்தனர். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு  இலங்கை வந்திருந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷம் இடையிலான முக்கிய சந்திப்பு நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இச் சந்திப்புக்காக ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகைதந்த பாகிஸ்தான் பிரதமரை ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர மற்றும் வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோர் வரவேற்றனர்.

தொடர்ந்து ஜனாதிபதியும் பாகிஸ்தான் பிரதமரும் இருதரப்பு உறவுகள் குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடினர்.

இரு நாடுகளிலும் விவசாயத் துறையை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்ப அறிவு பரிமாற்றம் குறித்தும் இரு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

விவசாயிகளுக்கு அதிக வருமானத்தையும் நுகர்வோருக்கு நிவாரண விலையையும் வழங்கும் வகையில் விவசாய பொருளாதாரத்தை மேம்படுத்துவதே தங்களது குறிக்கோளென்று தலைவர்கள் தெரிவித்தனர். பாகிஸ்தானின் விவசாய பொருளாதாரம் இலங்கையின் பொருளாதாரத்துடன் மிகவும் ஒத்திருக்கிறது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறினார்.

இலங்கையின் ஏற்றுமதித் துறையில் பாகிஸ்தான் முக்கிய பங்கு வகிக்கிறது. இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக மேம்பாடு மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவது குறித்தும் ஜனாதிபதியும் பாகிஸ்தான் பிரதமரும் கவனம் செலுத்தினர்.

கொவிட் - 19 தொற்று ஒழிப்புடன் இலங்கைக்கு சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ளுமாறு பாகிஸ்தான் மக்களுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி, இரு நாடுகளினதும் சுற்றுலாத் துறை முன்னேற்றத்திற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் குறிப்பிட்டார்.

இதேவேளை இப் பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்ததாக பாகிஸ்தான் பிரதமர் கூறினார். அத்துடன் தொழில்நுட்ப அறிவு பரிமாற்றம் உட்பட பல துறைகள் குறித்து கவனம் செலுத்துவதாக இரு தலைவர்களும் தெரிவித்தனர்.

Thu, 02/25/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை