மியன்மார் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிர்ப்பு வலுக்கிறது: பேஸ்புக் முடக்கம்

உலக நாடுகளுக்கு ஐ.நா அழைப்பு

மின்மாரில் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிராக உட்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில் நாட்டு மக்களின் பிரதான தொடர்பாடல் மூலங்களாக இருக்கும் பேஸ்புக் மற்றும் ஏனைய சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளன.

இந்த இராணுவ சதிப்புரட்சியின் தோல்வியை உலகம் உறுதி செய்ய வேண்டும் என்று ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் வலியுறுத்தியுள்ளார்.

மியன்மார் மக்கள் தொகையில் பாதி அளவானோர் பேஸ்புக்கை பயன்படுத்தும் நிலையில் இந்த சதிப்புரட்சிக்கு எதிரான தளமாக அந்த ஊடகம் மாறியுள்ளது. சிவில் ஒத்துழையாமை போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பான புகைப்படங்கள் பேஸ்புக்கில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வரும் பெப்ரவரி 7 ஆம் திகதி வரை சமூக ஊடுகங்கள் மீதான கட்டுப்பாடு தொடரும் என்று தொலைத்தொடர்பு மற்றும் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

“நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளவர்கள் தற்போது போலி செய்திகள் மற்றும் தவறான தகவல்கள் மற்றும் பேஸ்புக்கை பயன்படுத்துபவர்களிடம் தவறான புரிதலை பரப்பி வருகின்றனர்” என்று அந்த அமைச்சு எழுதியுள்ள கடிதம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மியன்மாரில் பேஸ்புக்கைப் பயன்படுத்த முடியவில்லை எனப் பயனர்கள் தெரிவித்தனர். மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிரான எதிர்ப்பை ஒருங்கிணைக்கும் பேஸ்புக் பக்கத்துக்கு 10,000க்கும் மேற்பட்ட லைக்குகள் குவிந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற இராணுவ சதிப்புரட்சியின்போது கைது செய்யப்பட்ட ஆளும் கட்சித் தலைவர் ஆங் சான் சூச்சி எங்கே உள்ளார் என்பது பற்றி இன்னும் தெரியாத நிலையில் அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு உபகரணங்களை சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்ததாகவே குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அடுத்த ஓராண்டுக்கு இராணுவம் அவசர நிலையை அறிவித்துள்ளது. 2020ஆம் ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டி இராணுவம் ஆட்சிக்கவிழ்ப்பை நியாயப்படுத்தி வருகிறது. அத்தேர்தலில் ஆங் சாங் சூச்சி அமோக வெற்றியீட்டி இருந்தார்.

மியன்மாரில் அரசியலமைப்புச் சட்டம் மீண்டும் நிறுவப்பட வேண்டும் என ஐ.நா பொதுச் செயலாளர் குட்டரஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

“மியன்மாரில் இராணுவ ஆட்சி தோல்வியடைய, ஐ.நா சபையால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் செய்வோம். சர்வதேச சமூகத்தில் இருக்கும் முக்கிய நாடுகள் மூலம் மியன்மார் மீது கடுமையான அழுத்தம் கொடுக்கப்படும்” என அவர் கூறியுள்ளார்.

“மியன்மார் மக்களின் மனதையும், தேர்தல் முடிவுகளையும் மறுப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. நாட்டை இப்படி நடத்தக் கூடாது, இப்படி முன்னெடுத்துச் செல்லக் கூடாது என்பதை மியன்மார் இராணுவத்துக்கு புரிய வைக்க முடியும் என நம்புகிறேன்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேற்கத்திய நாடுகள் மியன்மார் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பைக் கண்டிக்கின்றன. ஆனால் மியன்மாரைக் கண்டிக்க சீனா மறுப்பதால், ஐ.நா பாதுகாப்புச் சபையில் ஒரு பொது நிலைப்பாட்டை எடுக்க முடியவில்லை. சீனா, ஐ.நா பாதுகாப்புச் சபையில் விட்டோ பலம் கொண்ட ஒரு நிரந்தர உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த பல ஆண்டுகளாக மியன்மாரை, சீனா சர்வதேச விசாரணையிலிருந்து பாதுகாத்துக் கொண்டிருப்பதும் இங்கு நினைவுகூறத்தக்கது. ரொஹிங்கிய முஸ்லிம்கள் பிரச்சினையின் போது கூட சீனா ரஷ்யாவோடு சேர்ந்து கொண்டு மியன்மாரை சர்வதேச விமர்சனங்களிலிருந்து பாதுகாத்தமை குறிப்பிடத்தக்கது. இப்போது கூட மியன்மார் மீது சர்வதேச அழுத்தம் கொடுப்பது மற்றும் பொருளாதாரத் தடைகளை விதிப்பது, சூழலை மேலும் மோசமாக்கும் என சீனா எச்சரிக்கிறது.

மியன்மாரின் ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமை இரவு, மியான்மரின் யங்கூன் நகரில் ஒட்டுநர்கள் தங்கள் வாகனத்தின் ஹோர்ன்கள் மூலம் ஒலி எழுப்பி, தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள். அதேபோன்று அந்நகரில் வாழும் மக்கள் தங்கள் பாத்திர பண்டங்களை அடித்து ஒலி எழுப்பி தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள்.

மருத்துவமனைகளில் மருத்துவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டார்கள். பலரும் தங்களின் பணியை நிறுத்தினார்கள். சிலர் பணியைத் தொடர்ந்தாலும், இராணுவ அடக்குமுறைக்கு தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யும் விதத்தில் சில இலச்சினைகளை அணிந்து கொண்டார்கள்.

போராட்டக்காரர்கள் சிவப்பு அல்லது கறுப்பு ரிப்பன்களை அணிந்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்கிறார்கள். அத்துடன் கடந்த ஆண்டு தாய்லாந்தில் நடந்த மக்கள் போராட்டத்தில் பயன்படுத்தப்பட்ட மூன்று விரல் சல்யூட்டையும் மியன்மார் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். பலரும் தங்கள் சமூக வலைதளங்களின் அடையாளப்படங்களை சிவப்பு நிறத்துக்கு மாற்றி ஆங் சாங் சூச்சியின் கட்சிக்கு தங்கள் ஆதரவைப் பதிவு செய்துள்ளனர்.

Fri, 02/05/2021 - 12:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை