- மன்னார் பிரஜைகள் குழு
சிங்கள மொழியைப் போன்று தமிழ் மொழியும் அரச கரும மொழியாக உள்ளமையினால் தமிழ் மொழியிலும் தேசிய கீதத்தினைப் பாடுவதற்கு அரசு ஆவன செய்ய வேண்டும் என மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
இவ் விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
பெப்ரவரி 4ஆம் திகதி சுதந்திர தினத்தன்று தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட மாட்டாது என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தமையை மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு வன்மையாக கண்டிக்கின்றது.
சிங்கள மொழியைப் போன்று தமிழ் மொழியும் அரச கரும மொழியாக இருக்கின்ற படியினால் தமிழ் மொழியிலும் தேசிய கீதத்தினைப் பாடுவதற்கு அரசு ஆவன செய்ய வேண்டும் என்று மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு ஆகிய நாம் வலியுறுத்துகின்றோம்.
இது தமிழ் மொழியிலும் பாடப்படும் போது இனப் பிரச்சினைக்குரிய தீர்வுக்கான ஒரு வழியாக அமையும் என்று நம்புகின்றோம். இல்லையேல் இது இனப் பிரச்சினை தீர்வுக்கான வழியினை அடைக்கும் செயலாகவே அமையும் என்பதனை வலியுறுத்தி நிற்கின்றோம்.
தலைமன்னார் விசேட நிருபர்
from tkn