தடுப்பூசி ஏற்றிக்கொள்ள அச்சப்படத்தேவையில்லை

தைரியம் கூறுகிறார் அமைச்சர் சுதர்ஷனி

கொரோனா தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதற்கு அச்சம் கொள்ள தேவையில்லையென இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி வேலைத்திட்டத்தின் கீழ் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ள அனைவரும் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள வேண்டுமென்றும் அவர் கூறியுள்ளார்.  கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தற்பொழுது பயன்படுத்தப்படும் தடுப்பூசியினால் பாதிப்பு ஏற்படுவதாக சமூக ஊடகங்களில் வெளிவரும் தகவல்களினால் பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. இந்த தடுப்பூசி திட்டத்திற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மக்கள் பெரும்பான்மையினர் இந்த தடுப்பூசியை பெற்றுக்கொண்டால் தான் கொரோனா தடுப்புக்கான எமது திட்டத்தை வெற்றி கொள்ள முடியும்.

சிலர் இந்த திட்டத்திற்கு எதிராக தவறான கருத்துக்களை மக்கள் மத்தியில் முன்னெடுப்பதை கவனத்தில் கொண்டுள்ளோம்.

சமூக ஊடகங்களான முகப்புத்தகத்தில் இவ்வாறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர். இதனால் பக்கவிளைவுகள் பெருமளவில் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.

இதுவரை 2,50,000 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. தடுப்பூசி ஏற்றப்பட்டோர் மத்தியில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் தகவல்கள் எதுவும் இல்லை.

பொதுவாக இவ்வாறான தடுப்பூசி ஏற்றும் போது சிறியளவிலான பக்கவிளைவு ஏற்படக்கூடும். இது வழமையான ஒன்று.

மக்களுள் பெரும் பாலானோர் இந்த தடுப்பூசியை ஏற்றிக்கொண்டால் தான் இத்திட்டத்தை வெற்றிக்கொள்ள முடியும்.

கொவிட்19 தடுப்பூசி கொழும்பு மாவட்டத்திலுள்ள பொது மக்களுக்கு கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிக்கு முன்னுரிமை அளித்துள்ளதாகவும், இந்த தடுப்பூசி கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Thu, 02/18/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை