- பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்
மன்னார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மேலும் 25கொரோனா தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் இதுவரை 260கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நேற்று காலை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
மாவட்டத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மேலும் 25கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 24நபர்கள் மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும்,மேலும் ஒருவர் மடு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மாந்தை மேற்கில் அடையாளம் காணப்பட்ட 24நபர்களில் கடந்த வாரம் தொற்றுடன் ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் அடையாளம் காணப்பட்டவரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் வலைப்பாட்டு பகுதியில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட குடும்பத்துடன் நெருங்கி பழகியவர்கள்.
மேலும் சாவக்கச்சேரி பகுதியில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளடங்கியுள்ளனர். மடுவில் அரச அலுவலகம் ஒன்றில் கடமையாற்றுகின்ற உத்தியோகஸ்தர் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர்களுடன் சேர்த்து மன்னார் மாவட்டத்தில் இது வரை 260பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த வருடம் ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய இரு மாதங்களில் 243பேர் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த மாதம் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் உடலில் உள்ள வைரசின் அளவு மிகவும் கூடுதலாக இருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இதனால் இவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பலர் இலகுவாக தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.இந்த நிலமை பாரதூரமானது.
எனவே மக்கள் சுகாதார நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்றிக் கொள்ள வேண்டும்.
மன்னார் மாவட்டத்தில் இது வரை 10ஆயிரத்து 470பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த மாதம் 1842 பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.
மன்னார் குறூப் நிருபர்
from tkn