- வீரப் பதக்கங்களுடன் ஜனாதிபதி
- சுகாதார வழிமுறைக்கு முக்கியத்துவம்
- பிரதமர், சபாநாயகர், எதிர் கட்சித் தலைவர் பங்கேற்பு
இலங்கையின் 73ஆவது தேசிய சுதந்திர தின பிரதான நிகழ்வு கொழும்பு 07 லுள்ள சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நேற்றுக் காலை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
“சுபீட்சமான எதிர்காலம் சௌபாக்கியமான தாய்நாடு” என்ற தொனிப்பொருளில் இம்முறை நடைபெற்ற சுதந்திர தின பிரதான நிகழ்வில் ஐயரிரத்திற்க்கும் அதிகமான முப்படை வீரர்கள், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு படைவீரர்கள் கலந்து சிறப்பித்தனர்.
நாட்டின் சுதந்திரத்தின் அடையாள சின்னமாக கருதப்படும் சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற சுதந்திர தின பிரதான நிகழ்வுகள் இலங்கை உட்பட உலகளாவிய ரீதியில் காணப்படும் கொரோனா நிலைமையை கருத்திற் கொண்டு சுகாதார வழிமுறைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு மட்டுப்படுத்தப்பட்ட அதிதிகள் அழைக்கப்பட்ட நிலையில் நடைபெற்றது. அத்துடன் வீணான செலவுகளை தவிர்த்து மிகவும் எளிமையான முறையிலும் தேசத்தின் அபிமானத்தை பாதுகாக்கும் வகையில் கம்பீரத்துடனும் இம்முறை சுதந்திர தின பிரதான வைபவம் சிறப்பாக நடைபெற்றமை அனைவரதும் பாராட்டை பெற்றது.
இம்முறை சுதந்திர தின பிரதான அணிவகுப்பில் முப்படையினர், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் சுமார் ஐயாயிரத்திற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் இராணுவத்தைச் சேரந்து 3153 பேரும், கடற்படையைச் சேர்ந்த 821 பேரும், விமானப் படையைச் சேர்ந்த 740 பேரும் பொலிஸ் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையைச் சேர்ந்த 510 பேரும் சிவில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 457 பேரும் அடங்குவர். மட்டுப்படுத்தப்பட்ட வகையிலேயே முப்படையினர் இம்முறை பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது. அதேபோன்று ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், முப்படைத் தளபதிகள் உட்பட பிரமுகர்கள் அனைவரும் முககவசங்கள் அணிந்த நிலையில் கலந்து கொண்டமை விஷேட அம்சமாகும்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, எதிர் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, நீர்ப்பாசன அமைச்சரும் தேசிய பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் விஷேட ஆலோசகர் லலித் வீரதுங்க, மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ஒப் த எயார்போஸ் ரொஷான் குணதிலக்க உட்பட அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள், உள்நாட்டு, வெளிநாட்டு தூதுவர்கள், உயர் ஸ்தானிகர்கள், இராஜதந்திரிகள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டு சுதந்திர தின நிகழ்வை சிறப்பித்தனர்.
சுதந்திர தின பிரதான நிகழ்வை முன்னிட்டு கொழும்பு-07 சுதந்திர சதுக்கம் உட்பட அதனை அண்டிய பிரதேசம் எங்கும் தேசிய கொடிகள் மற்றும் வர்ண கொடிகள் பறக்கவிடப்பட்டு அந்தப் பிரதேசம் விழாக்கோலம் பூண்டு காணப்பட்டன. அத்துடன் விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
அத்துடன் அட்மிரல் ஒப் த பிலீட் வசந்த கரண்ணாகொட, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ பி ஜயசுந்தர, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், பாதுகாப்புச் செயலாளரும் தேசிய பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்தன முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளருமான ஜெனரல் கமல் குணரட்ன, பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன, பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரட்ண ஆகியோரும் சுதந்திர தின நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
இராணுவ உயர் பதக்கங்களுடன் ஜனாதிபதி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட பின்னர் நடைபெற்ற இரண்டாவது சுதந்திர தின நிகழ்வு இதுவாகும்.
அதேபோன்று தான் இராணுவத்தில் இணைந்து தாய் நாட்டிற்காக சேவையாற்றியமைக்காக தனக்கு வழங்கப்பட்ட இராணுவ உயர் பதக்கங்களை அணிந்த நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இம்முறையும் நாட்டின் சுதந்திர தின பிரதான நிகழ்வில் பங்கேற்றமை இந்த நிகழ்வை மேலும் அலங்கரித்து காண்பித்தது.
குதிரைப் படைகளின் ஆரவாரமின்றி சாதாரணமான முறையில் வாகன பவனியுடன் மாத்திரம் சுதந்திர சதுக்கத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி, தேசிய கொடியை சம்பிரதாய முறையில் ஏற்றி சுதந்திர தின பிரதான நிகழ்வை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்ததுடன் சுதந்திர சதுக்கத்திலிருந்து நாட்டு மக்களுக்கு விஷேட உரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து ஜனாதிபதிக்கு விஷேட மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டதுடன் மரியாதை நிமித்தம் 21 பீரங்கி வேட்டுக்களும் தீர்க்கப்பட்டன.
இம்முறை 11 சிங்கள, தமிழ், முஸ்லிம் பாடசாலைகளைச் சேர்ந்த 45 மாணவ, மாணவிகளால் தேசிய கீதம் பாடப்பட்டதுடன், 15 மாணவிகளால் ஜயமங்கள காதாவும் தேவ வஸ்தும் இசைக்கப்பட்டன. இராணுவம், கடற்படை, விமானப் படை, பொலிஸ், சிவில் பாதுகாப்பு படை, தேசிய இளைஞர் படை, ஆகிய வற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் ஐயாயிரத்திற்கும் அதிகமான படைவீரர்களின் மரியாதை அணிவகுப்பும், முப்படைவீரர்களின் சாகசங்களும் காண்பிக்கப்பட்டது.
முப்படைகளின் மரியாதை அணிவகுப்பு
இலங்கை இராணுவத்தின் பிரதான பதவிநிலை பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னோண்டோ சுதந்திர தின முப்படை பிரதான அணிவகுப்பின் கட்டளை தளபதியாகவும் பிரிகேடியர் ஹரேந்திர பீரிஸ் இரண்டாவது கட்டளை அதிகாரியாகவும் செயற்பட்டனர். கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்தி கொமொடோர் இசுரு காசிவத்தவும், விமானப் படையை பிரதிநிதித்துவப்படுத்தி சீனக்குடா விமானப் படைத் தளத்தின் தளபதி எயார் கொமொடோர் பந்துல எதிரிசிங்கவும் அணிவகுப்பிற்கு தலைமை வகித்து சென்றனர்.
இராணுவம்
இலங்கையின் கம்பீரத்தை பிரதிபலிக்கும் வகையில்; மிகப்பெரிய சிங்கத்தின் உருவச்சிலை வாகன பவணி மற்றும் தேசிய கொடி ஏந்திய படையினரின் வருகையுடன் அணிவகுப்பு ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து கஜபா, கெமுனு, விஜயாகு, சிங்க, கொமாண்டோ மற்றும் விஷேட படையணிகள் உட்பட அனைத்து படைகளினதும் அணிவகுப்பு இடம்பெற்றது. அதன் பின்னர் இராணுவத்தின் ஆயுதங்கள், கணரக கவச வாகனங்கள், யுத்த தளபாடங்கள், உபகரணங்கள். பீரங்கி தாங்கிய வாகனங்கள், உள்நாட்டு உற்பத்தி வாகனங்கள், பொறியியல் உபகரணங்கள் உட்பட யுத்த காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் இராணுவம் பயன்படுத்தும் பல்வேறு வாகனங்களும் அணிவகுத்து சென்றது.
கடற்படை
அதேபோன்று கடற்படையின் எட்டு வகையான பிரிவினர் அணிவகுப்பில் கலந்து கொண்டனர். இவர்களில் கடற்படையின் விஷேட படகு பிரிவினர், மீட்பு பிரிவினர், மெரைன் படைப் பிரிவினர், பெண்கள் படைப்பிரிவினர் சுழியோடிகள் போன்ற பிரிவுகள் இதில் அடங்கும். இலங்கை கடற்படையினரால் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்படும் படகுகளும் வகனங்களில் ஏற்றி கொண்டுச் செல்லப்பட்டன.
விமானப் படை
விமானப் படையினரும் தரையில் தமது பிரிவுகள் பிரதிநிதிதுவப்படுத்தி விமானப் படையினரால் பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன் அணிவகுத்து சென்ற அதேசமயம் கொழும்பு சுதந்திர சதுக்க மற்றும் அதனை அண்டிய வான் பரப்பில் விமானப் படையின் பல்வேறு ரக விமானங்கள், ஹெலிகொப்டர்கள், தாக்குதல் விமானங்கள் உள்ளடங்களாக 26 வகை விமானங்கள் தேசிய கொடி மற்றும் முப்படைகளின் கொடிகளை பறக்க விட்ட நிலையில் வானில் சாகசங்களை காண்பித்த வண்ணம் அணிவகுத்து பறந்துச் சென்றது. எப்7, ரக தாக்குதல் விமானங்களும், எம்ஏ 60, வை12, பிரி6, ரக விமானங்களும், பெல் 412, பெல் 212, எம்ஐ 17 ரக ஹெலிகொப்டர்களுமே இவ்வாறு சாகங்களை காண்பித்தது.
பொலிஸ், சிவில் பாதுகாப்பு படை
பொலிஸாரின் அணிவகுப்பிற்கு மேலதிகமாக பொலிஸாரின் மிகவும் பழைமை வாய்ந்ததும் பாரம்பரியதுமான பாண்ட் வாத்தியங்களுடன் அணிவகுத்து சென்றனர் அத்துடன்; பொலிஸ் குதிரைப் படையினரும் பொலிஸாரை தொடர்ந்து பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரும் அணிவகுத்து சென்றனர்.
இது தவிர சிவில் பாதுகாப்பு படை மற்றும் தேசிய மாணவர் படையணியினர் மற்றும் தேசிய இளைஞர் படையணியினரும் கலந்து சிறப்பித்தனர்.
முப்படைகளின் முன்னாள் அதிகாரிகள், அங்கவீனமுற்ற படைவீரர்கள்
இம்முறை முதற் தடவையாக முப்படைகளில் சேவையாற்றி ஓய்வுபெற்ற மற்றும் அங்கவீனமுற்ற முன்னாள் அதிகாரிகளின் அணிவகுப்பும் இடம்பெற்றது. இவர்களுக்கு என நேற்று முன்தினம் முதற் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்ட தத்தமது பதக்கங்களைக் கொண்ட புதிய வகை சீருடையை அணிந்த நிலையில் ஜனாதிபதிக்கு மரியாதை செலுத்தியவாறு வாகன பவணியில் அணிவகுத்து சென்றமை சிறப்பம்சமாகும்.
கலாசார நிகழ்வு
முப்படையினர் பொலிஸார், சிவில் பாதுகாப்பு படை, தேசிய இளைஞர் பேரவை, மாகாண சபைகள் மற்றும் கலாச்சார நிலையங்களை பிரதிநிதித்துவப்படுத்தி இசை மற்றும் நடன கலைஞர்கள் 340 பேர் கலாசார நிகழ்வில் பங்குபற்றினர்.
உள்நாட்டு உற்பத்தி, சகல இன, மத கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் தமது திறமைகளை காண்பித்த வண்ணம் அணிவகுத்து சென்றமை கண்கவரும் வண்ணம் அமைந்திருந்தன.
ஸாதிக் ஷிஹான்
from tkn