ட்ரம்ப் மீதான செனட் விசாரணை ஆரம்பம்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் இரண்டாவது நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான செனட் சபை விசாரணை நேற்று ஆரம்பமாகியுள்ளது. இந்த விசாரணையை விரைவுபடுத்த அந்த சபை இணங்கியுள்ளது.

அமெரிக்க பாராளுமன்றத்தில் ஜனவரி 6ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்திற்கு முன்னர் தனது ஆதரவாளர்களிடம் உரையாற்றிய டிரம்ப், கிளர்ச்சியை தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அவர் குற்றவாளி என்பதற்கான போதிய ஆதாரங்கள் இருப்பதாக ஜனநாயகக் கட்சியினர் கூறியபோதும், கலகக்காரர்கள் சுதந்திரமாகவே செயற்பட்டிருப்பதாக டிரம்பை காத்துப் பேசும் குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விசாரணை சட்டவிரோதமானது என்று டிரம்ப் தரப்பு கூறி வருகிறது. எனவே இதன் சட்டத் தன்மை குறித்தே அவர்கள் நேற்று வாதிட்டுள்ளனர்.

அமெரிக்க வரலாற்றில் இரு தடவைகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்ட முதல் ஜனாதிபதியாக டிரம்ப் உள்ளார். எனினும் இதுவரை எந்த அமெரிக்க ஜனாதிபதி மீதும் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவெற்றப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் டிரம்ப் குற்றங்காணப்பட்டால் அவர் மீண்டும் அரச பதவி ஒன்றை வகிப்பது தடை விதிக்கப்படும். எனினும் இது நிறைவேற்றப்பட 100 ஆசனங்களைக் கொண்ட செனட் சபையில் மூன்றில் இரண்டு ஆதரவு தேவையாக உள்ளது. தற்போது ஜனநாயகக் கட்சியினர் 50 இடங்களை பெற்றிருப்பதோடு இதற்கு குடியரசுக் கட்சியினரின் ஆதரவு குறைவாகவே உள்ளது.

விசாரணைக்கு முன்னர் கடந்த திங்கட்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு ஒன்றில், டிரம்ப் ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேறி தற்போது ஒரு தனி குடிமகனாக இருப்பதால் இந்த விசாரணை சட்டவிரோதமானது என்று டிரம்பின் வழக்கறிஞர்கள் வாதிட்டுள்ளனர்.

Wed, 02/10/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை