வருடாந்த இடமாற்றத்தினை மீள செயற்படுத்துமாறு பணிப்பு

- கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர்

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கிழக்கு மாகாண இணைந்து சேவை உத்தியோகத்தர்களின் 2021 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றத்தினை எதிர்வரும் மார்ச் மாதம் 01 ஆம் திகதியிலிருந்து மீளச் செயற்படுத்துமாறு கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிருவாகம்) எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ. திசாநாயக்க அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த செயலாளர்களுக்கும், பிரதிப் பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்கள் ஆகியோருக்கு சுற்று நிரூபம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் நிலவும் கொவிட்-19 தொற்று அபாயத்தை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளை தடையின்றி மேற்கொள்வதற்காகவும் நேரத்திற்கு நேரம் மாகாணத்தின் பல பகுதிகள் முடக்கப்படுவதன் காரணமாகவும் இணைந்த சேவைக்கான வருடாந்த இடமாற்றங்களை செயற்படுத்துவதற்கு தடைகள் ஏற்பட்டிருந்ததால் மாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கமைய கடந்த 18ம் திகதியிலிருந்து செயற்படுத்தப்படவிருந்த வருடாந்த இடமாற்றங்கள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்ததாக அறிவித்துள்ளார்.

2021ம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றத்தின் கீழ் இடமாற்றம் பெற்று விசேட காரணங்களின் பேரில் இடமாற்றம் ஒத்தி வைக்கப்பட்ட மற்றும் இரத்துச் செய்யப்பட்ட உத்தியோகத்தர்கள் தவிர ஏனைய இடமாற்றம் வழங்கப்பட்ட அனைத்து உத்தியோகத்தர்களும் தனது புதிய சேவை நிலையங்களுக்கு சமூகமளிக்க வேண்டும்.

காரணங்களை சுட்டிக்காட்டி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக தமது காரியாலயங்களில் வைத்திருப்பதற்கு திணைக்களத் தலைவர்கள் செயற்படாதிருத்தல் வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்கள் உரிய முறைப்படி விடுவிப்பினைப் பெற்று குறிப்பிட்ட திகதியில் புதிய சேவை நிலையங்களில் கடமையைப் பொறுப்பேற்று அது பற்றி அறிவிக்குமாறு கேட்டுள்ளார்.

ஒலுவில் விசேட, அட்டாளைச்சேனை மத்திய நிருபர்கள்

Fri, 02/19/2021 - 15:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை