- இன்று முதல் மூன்று நாட்களுக்கு தேர்தல்
கிழக்கு மாகாணத்தில் ஏழு உள்ளூராட்சி சபைகளுக்கான புதிய தலைவர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். இதற்கான தேர்தல்கள் இன்று 10ஆம் திகதி தொடக்கம் மூன்று நாட்களுக்கு இடம்பெறும். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்கள் வெளிவந்துவிட்டதாக மாகாண உள்ளூராட்சி ஆணையானர் என்.மணிவண்ணன் தெரிவித்தார்.
அவர் இதுபற்றி மேலும் தெரிவிக்கையில், கிழக்கு மகாணத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளுள் மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று வடக்கு, ஏறாவூர் நகரம், மண்முனை ஆகியவையும், அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில், இறக்காமமும், திருமலை மாவட்டத்தில் தம்பலகாமம், சேரு வில ஆகியவும் இதற்குள் அடங்குகின்றன.
இந்த ஏழு உள்ளூராட்சிச் சபைகளுக்கான புதிய தலைவர்கள் அந்தந்த சபை உறுப்பினர்களின் மத்தியிலிருந்து தெரிவு செய்யப்பட இருக்கிறார்கள்.
இந்த 7 சபைகளினதும் நடவடிக்கைகள் உள்ளூராட்சிச் சட்ட ஏற்பாடுகளுக்கு ஏற்ப நடைபெற்றதால் அதன் தவிசாளர்கள் பதவிகளை இழந்துள்ளனர்.
திருமலை மாவட்ட உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல் இன்று 10ஆம் திகதியும் மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல் நாளை 11ஆம் திகதியும், அம்பாறை மாவட்டத்துக்கான தேர்தல் வெள்ளிக்கிழமையும் 12 ஆம் திகதியும் இடம்பெறுமென அவர் தெரிவித்தார்.
தேர்தலுக்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்டங்களுக்குப் பொறுப்பான உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள் மேற்கொள்வார்கள் என அவர் தெரிவித்தார்.
புளியந்தீவு குறூப், புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்கள்
from tkn