- எம்.பிக்கள் பார்வையிட பாராளுமன்ற நூலகத்திற்கு
- விரைவில் தனித்தனி பிரதி வழங்க நடவடிக்கை
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்கதல்கள் தொடர்பில் விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவிடம் இன்று (23) கையளிக்கப்பட்து.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் அவரின் சட்ட விவகாரப் பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்த ரோஹணதீர இதனை அவரிடம் கையளித்தார்.
குறித்த அறிக்கை தனக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக, சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன இன்று பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று (22) அமைச்சரவை கூடியபோது இந்த அறிக்கை ஜனாதிபதியினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன், இதனைப் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்தார்.
இதற்கமைய குறித்த அறிக்கையை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இன்று முற்பகல் சபாநாயகரின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இச்சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்கவும் கலந்துகொண்டிருந்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்காக இந்த அறிக்கையின் பிரதிகளை விரைவில் வழங்குமாறு ஜனாதிபதியின் சட்டப் பணிப்பாளர் நாயகத்திடம் சபாநாயகர் கோரிக்கை விடுத்திருந்தார். அறிக்கையின் பிரதிகள் கிடைத்தும் அதனை சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகர் கூறினார்.
அத்துடன் கிடைக்கப்பெற்ற அறிக்கையை பாராளுமன்ற நூலகத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக, சபாநாயகர் இன்று பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
from tkn