சீனாவில் பி.பி.சி சேவையை ஒளிபரப்புச் செய்வதற்கு அந்நாட்டு தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒழுங்குபடுத்தல் நிறுவனம் தடை விதித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று மற்றும் உய்குர் சிறுபான்மை இனத்தினர் மீதான நடவடிக்கை குறித்த பி.பி.சியின் செய்தி அறிக்கைகள் குறித்து சீனா விமர்சனத்தை வெளியிட்டுள்ளது.
இந்த முடிவு ஏமாற்றம் தருவதாக பி.பி.சி தெரிவித்துள்ளது.
பிரிட்டன் ஊடக ஒழுங்குபடுத்தல் நிறுவனம் சீன அரச ஒளிபரப்பாளரான சைனா கிளோபல் டெலிவிசன் நெட்வேர்க் நிறுவனத்தின் உரிமத்தை திரும்பப் பெற்றதன் தொடர்ச்சியாகவே சீனா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சி.ஜி.டி.என் உரிமத்தை ஸ்டார் சீனா மீடியா என்ற நிறுவனம் விதிகளை மீறி பெற்றிருப்பதாக தெரிய வந்ததையடுத்து அதன் ஒளிபரப்புக்கு பிரிட்டன் இந்த மாத ஆரம்பத்தில் கட்டுப்பாடுகளை விதித்தது.
சீனா, உய்குர் இன மக்களை எவ்வாறு நடத்துகிறது என்பது குறித்த சர்ச்சைக்குரிய செய்தியை பி.பி.சி நிறுவனம் ஒளிபரப்பியதன் மூலம் விதிமுறைகளை மீறியதாக குறைகூறப்பட்டுள்ளது.
சீனாவின் தேசிய கொள்கைக்குப் பாதகம் விளைவித்ததோடு தேசிய ஒற்றுமையையும் பி.பி.சி நிறுவனம் கீழறுப்பதாகச் சீன ஒளிபரப்புக் கட்டுப்பாட்டு அமைப்பு குறிப்பிட்டது.
from tkn