337 இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 8,563 இராணுவத்தினர் தரம் உயர்வு

337 இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 8,563 இராணுவத்தினர் தரம் உயர்வு-8563 Army Personnel Including 337 Officers Promoted to Next Rank-73rd Independence Day

73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இலங்கை இராணுவத்தின் நித்திய மற்றும் தன்னார்வப் படைகளின் 337 அதிகாரிகள் மற்றும் ஏனைய தரத்திலுள்ள 8,226 பேர் உள்ளிட்ட 8,563 பேர் அடுத்த தரத்திற்கு தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு படைகளின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான, பாதுகாப்பு அமைச்சு மற்றும் ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் பரிந்துரைக்கு அமைய, பாதுகாப்பு படைகளின் சேனாதிபதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் இப்பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 14 பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல் தரத்திற்கும், 23 கேர்ணல்கள் பிரிகேடியர் தரத்திற்கும், 35 லெப்டினன்ட் கேர்ணல்கள் கேர்ணல் தரத்திற்கும், 34 மேஜர்கள் லெப்டினன்ட் கேர்ணல் தரத்திற்கும், 206 கெப்டன்கள் மேஜர் தரத்திற்கும், 22 லெப்டினன்ட்கள் கெப்டன் தரத்திற்கும் இரண்டாம் லெப்டினன்ட்கள் 3 பேர் லெப்டினன் தரத்திற்கும் என நித்திய மற்றும் தன்னார்வப் படைகளின் 337 அதிகாரிகளுக்கு தரமுயர்வு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 1,351 சார்ஜென்ட்கள், 1,422 கோப்ரல்கள், 2070 லான்ஸ் கோப்ரல்கள், 2,415 சாதாரண படைவீரர்கள் உள்ளிட்ட 8,226 பேர் இன்று முதல் (04) அமுலுக்கு வரும் வகையில் அடுத்த தரத்திற்கு தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.

கடந்த 2019 ஓகஸ்ட் மாதத்தில் ஜெனரல் ஷவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இராணுவ வரலாற்றில் 2,476 இராணுவ அதிகாரிகள் மற்றும் ஏனைய தரத்திலுள்ள 50,860 பேர் தரமுயர்த்தப்பட்டுள்ளதன் மூலம் இராணுவ வரலாற்றில் இது மற்றுமொரு மைல்கல்லாக பதிவாகியுள்ளது.

தேசத்தின் பாதுகாவலர்கள் என அழைக்கப்படும் இராணுவ உறுப்பினர்களின் தாமதமான உத்தியோகபூர்வ தரம் உயர்வுகளுக்கு அனுமதியளித்தமை தொடர்பில் பாதுகாப்புத் தளபதியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துள்ளதாக, இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.

Thu, 02/04/2021 - 14:10


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை