மாகாண சபை முறைமையை அரசு இரத்து செய்யவுள்ளதாக TNA பொய்ப் பிரசாரம்

தேர்தல் காலவரையறையின்றி தள்ளிப்போனமைக்கு அவர்களே காரணம்

கொவிட்-19 வைரஸ் தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின்னர் மாகாண சபை தேர்தல் நிச்சயம் நடத்தப்படுமென சமுர்த்தி, நுண்கடன் மற்றும் அரச தொழில் வழங்கல் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மாகாண சபை முறைமையை அரசாங்கம் இரத்துச் செய்ய முயற்சிப்பதாக தமிழ்த் தேசிய

 கூட்டமைப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டு தவறானதாகும். மாகாண சபை தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு கூட்டமைப்பினர் பொறுப்புக் கூற வேண்டும். நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்திலும் கூட்டமைப்பினர் பங்காளிகளாக செயற்பட்டுள்ளார்கள்.

இனப்பிரச்சினைக்கு தீர்வாகவே மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. மாகாண சபைமுறைமையை முழுமையாக செயற்படுத்த முடியாது. மாகாண சபை முறைமையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு சில விடயங்கள் நாட்டின் அரச கட்டமைப்புக்கு பொருத்தமற்றதாக உள்ளது. முரண்பாடற்ற வகையிலான விடயங்கள் மாத்திரம் மாகாண சபை முறைமையில் ஜனாதிபதியாகவிருந்த போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ செயற்படுத்தினார்.

மாகாணசபை தேர்தலை நடத்தினால் அரசாங்கம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் தோல்வியடையுமென்பதை நன்று அறிந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் மாகாண சபை தேர்தல் நடத்தப்பட்டது. ஏனைய மாகாணங்களை விடவும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மாகாணசபை முறைமை அத்தியாவசியமானதொன்றாகவே காணப்பட்டது. தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தமக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்தனர்.

நாம் வழங்கிய தேர்தல் உரிமையை நல்லாட்சி அரசாங்கம் பாதுகாக்கவில்லை. உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் அடைந்த தோல்வியின் அச்சத்தினால் மாகாண சபை தேர்தல் பிற்போடப்பட்டது. இதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் பிரதான எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு ஆதரவு வழங்கினர். நல்லாட்சி அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளுக்கும் கூட்டமைப்பினர் துணை நின்றனர்.

மாகாணசபை முறைமையை அரசாங்கம் நீக்க முயற்சிப்பதாக கூட்டமைப்பினர் தற்போது குற்றஞ்சாட்டுவது தவறாகும்.

மக்களின் ஜனநாயாக உரிமைகளுக்கு புறம்பாக அரசாங்கம் செயற்படாது. கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் மத்தியில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது சவால்மிக்கது.

Sat, 01/16/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை