பாராளுமன்றம் இன்று கூடுகிறது

2021ஆம் ஆண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று நடைபெறும். அதன் பிரகாரம் புத்தாண்டில் பாராளுமன்ற அமர்வுகளை இன்று முதல் ஆரம்பிக்க சகல நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தின் அனைத்து திணைக்களங்களும் முழுமையாக செயற்படுவதுடன், கொவிட் 19 சுகாதார ஒழுங்கு விதிகளுக்கு அமைய தயாரிக்கப்பட்ட வழிகாட்டல்களின் கீழ் ஊடகவியலாளர்கள் பாராளுமன்ற அமர்வுகளை அறிக்கையிடுவதற்கான வசதிகள் செய்யப்பட்டிருப்பதாகவும் செயலாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற பணியாளர்களில் எழுமாறாகத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் அண்மையில் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் இந்தப் பரிசோதனைகளில் எவருக்கும் கொவிட் 19 தொற்றுநோய் உறுதி செய்யப்படவில்லையென்றும் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய ஜனவரி 8ஆம் திகதி வரை சபை அமர்வுகள் நடைபெறும். இன்றைய தினம் பாராளுமன்றத்தில் கடை, அலுவலக ஊழியர் திருத்த சட்ட மூலம் உள்ளிட்ட 04 திருத்த சட்ட மூலங்கள் விவாதத்திற்கு எடுக்கப்படவுள்ளதுடன், நாளைய தினம் தண்டனை சட்டக் கோவையின் திருத்த சட்டமூலம் உள்ளிட்ட 03 திருத்த சட்ட மூலங்கள் விவாதத்திற்கு எடுக்கப்படவுள்ளன.

ஜனவரி 7ஆம் திகதி புலமைச் சொத்து (திருத்த) சட்டமூலம் இரண்டாம் வாசிப்பு மற்றும் விமான நிலைய வரி உள்ளிட்ட 10 கட்டளைகள் விவாதத்திற்கு எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Tue, 01/05/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை