ஜனாஸா தகனம் செய்யப்படுவதற்கு எதிராக மன்னாரில் ஆர்ப்பாட்டம்

 

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவதற்கு எதிராக நேற்று மன்னாரில் அமைதியான முறையில் கண்டன போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

நேற்றுக் காலை 09 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக நடைபெற்ற இப் போராட்டத்தில் மதத்தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், மன்னார் நகர சபை மற்றும் பிரதேச சபைகளின் தலைவர்கள், உப தலைவர்கள், உறுப்பினர்கள், சட்டத்தரணிகள்,  பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார், மன்னார் பிரஜைகள் குழுவின் உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு இங்கு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக 'சிறுபான்மை இன மக்களின் மரணத்திற்கு இறுதி மரியாதை கொடு', 'ஜனாதிபதி அவர்களே எங்களது ஜனாசாவை புதைக்க அனுமதி தாருங்கள்', 'ஜனாசாவை பலாத்காரமாக எரிப்பதை நிறுத்து', 'இனவாத தீ அணையட்டும் இன்றுடன்', 'பிறக்கும் தையோடு தீ வைப்பதை முடித்து விடு', 'எமது நாட்டில் சிறுபான்மை மக்களின் உரிமையை பறிக்காதே' உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் கண்டன போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

போராட்டத்தை தொடர்ந்து மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு ஊர்வலமாக சென்று ஜனாதிபதிக்கு கொடுக்கும் வகையில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மெல்லிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

 

 

Fri, 01/01/2021 - 08:16


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை