தமிழ்ப் பிரதேசங்களில் தமிழ் மொழி பயன்பாடு உறுதிப்படுத்த வேண்டும்

- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் வெளியிடப்படுகின்ற வெளியீடுகள் அனைத்தும் அப் பிரதேச மக்களுக்கு விளங்கிக் கொள்ளும் வகை யில் அமைய வேண்டும் என்றும் மத்திய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற திட்டங்களுக்கான பெயர்கள் அனைத்தையும் வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் தமிழிலேயே பயன்படுத்த வேண்டுமென தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அரசாங்க திணைக்களங்களின் பிரதேச அதிகாரிகள் தேவையற்ற அசௌகரியங்களை தவிர்க்கும் வகையில் செயற்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் பிரதேசங்களில் தமிழ் மொழியை முழுமையாக செயற்படுத்துவதில் ஏதாவது நடைமுறைச் சிக்கல்கள் இருப்பின் தன்னுடைய கவனத்திற்கு கொண்டு வருமாறும் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் கிளிநொச்சி மாவட்ட இளைஞர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்கள் சிங்கள மொழியில் மாத்திரம் எழுதப்பட்டிருந்த நிலையில் ஏற்பட்ட அசௌகரியங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் நேற்று (04) கலந்துரையாடப்பட்ட போதே கடற்றொழில் அமைச்சரினால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் கிளிநொச்சி மாவட்டத்தில் நடத்தப்பட்ட வீட்டுத் தோட்டப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள், பிரதேச மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய மொழியில் தயாரிக்கப்பட்டு விரைவில் அனுப்பி வைக்கப்படுமெனவும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tue, 01/05/2021 - 14:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை