தடைசெய்யப்பட்ட தொழில் முறைகள் உடன் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்

- அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்தல்

பூநகரி கடல் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து வகையான சட்ட விரோத கடற்றொழில் முறைகளும் நிறுத்தப்பட வேண்டுமென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கடற்றொழில் அமைச்சராக தான் இருக்கும் வரை எக்காரணத்திற்காகவும் தயவு தாட்சண்யம் காண்பிக்கக் கூடாதெனவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பூநகரி பிரதேச செயலகத்தில் (26) நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் முன்னாய்த்தக் கூட்டத்திலேயே இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பூநகரி பிரதேச கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகள், மன்னார் போன்ற வெளி மாவட்டங்களிலிருந்து தினந்தோறும் தமது கடல் பிரதேசத்திற்கு வருகை தருகின்ற சுமார் எண்பதுக்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகள் சட்ட விரோதமான மீன் பிடித் தொழிலில் ஈடுபடுவதாகவும், இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வெளி மாவட்டங்களுக்கான அனுமதிகளைக் கொண்டிருப்போர் பூநகரி கடல் பிரதேசத்தில் தொழிலில் ஈடுபடுவது தொடர்பாக தொடர்ச்சியான முறைப்பாடு கிடைத்து வருவதாகவும், அதேபோன்று, பூநகரி பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற தடை செய்யப்பட்ட தொழிற் செயற்பாடுகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.

இச் சட்ட விரோத செயற்பாடுகளை நிறுத்துவதற்கு கடற்றொழில் திணைக்களம், கடற்படை, பொலிஸார் ஆகிய தரப்புக்கள் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.

ஒருங்கிணைப்பு முன்னாய்த்தக் கூட்டத்தில் பூநகரிப் பிரதேச செயலாளர் மற்றும் திணைக்களங்களின் அதிகாரிகள், பாதுகாப்பு தரப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடற்றொழில் மற்றும் நீர் வேளாண்மை, கல்வி, சுகாதாரம், விவசாயம் உட்பட பல்வேறு துறைகளில் பிரதேசத்தில் காணப்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பாகவும் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டது.

Wed, 01/27/2021 - 14:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை