மஸ்கெலியா எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர்கள் கோஷம்
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக 1,000 ரூபாய் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி மஸ்கெலியா நகரில் நேற்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
பெருந்தோட்டத் தொழிலாளர் ஊதிய உரிமைக்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு மலையக சிவில் அமைப்புகளும் ஆதரவு வழங்கியிருந்தன.
தனிமைப்படுத்தல் சட்டங்களை பின்பற்றி நடைபெற்ற இப்போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கருப்புப்பட்டி அணிந்திருந்ததுடன், தோட்டத் தொழிலாளர்களின் தொழில் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டுமெனவும் கோஷமெழுப்பினர்.
அத்துடன், தோட்டத் தொழிலாளர்களை இம்முறையும் ஏமாற்றுவதற்கு முற்பட்டால் போராட்டம் வெடிக்குமெனவும் எச்சரிக்கை விடுத்தனர்.
இதன்போது கருத்து வெளியிட்ட போராட்டக்காரர்கள்,
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக 1,000 ரூபாய் அவசியமென்ற கோரிக்கை 2014ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்டது.
தற்போது 06 வருடங்கள் கடந்துள்ளன.
இக்காலப்பகுதியில் பொருட்களின் விலை அதிகரித்து, வாழ்க்கைச்சுமையும் அதிகரித்துள்ளது. எனவே எவ்வித நிபந்தனையுமின்றி அடிப்படை நாள் சம்பளமாக 1,000 ரூபாய் வழங்கப்படவேண்டும்.
அதேபோல 25 நாட்கள் வேலை வழங்கப்படுவதையும் தோட்டக் கம்பனிகள் உறுதிசெய்ய வேண்டும். இந்த விடயத்தில் அரசாங்கத்தின் காத்திரமான தலையீடுகள் அவசியம் என தெரிவித்தனர்.
மஸ்கெலியா தினகரன் நிருபர்
from tkn