ஜனாதிபதி கோட்டாபயவினால் நியமனம்
வர்த்தமானி அறிவித்தலும் வெளியீடு
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் கடுமையான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கிய விசேட ஆணைக்குழுவொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளது.
இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளதுடன், ஆணைக்குழுவின் தலைவராக உயர்நீதிமன்ற நீதியரசர் எச்.எம்.எம் நவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் ஓய்வு பெற்ற பொலிஸ் மாஅதிபர் சந்திரா பெர்னாண்டோ மற்றும் ஓய்வுபெற்ற மாவட்ட செயலாளர் நிமல் அபேசிறி ஆகியோர் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 20ஆம் திகதி முதல் செயற்படும் வகையில் இந்த விசேட குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்கு இதற்கு முன்னர் நியமிக்கப்பட்டிருந்த ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் குறித்து விசாரணை மேற்கொள்வதற்கும், மனித உரிமைகள் விவகாரத்தை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பிலான சிபாரிசுகளை முன்வைப்பதும் இந்த ஆணைக்குழுவின் பணியாகும்.
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட முன்னைய விசாரணை ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களால் ஏதேனும் மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் மீறல்களாக குற்றங்களை வெளிப்படுத்தியுள்ளனவா? என்பதைக் கண்டறிதலும் இந்த புதிய ஆணைக்குழுவின் பணியாகும்.
மனித உரிமைகளின் கடுமையான மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்டங்களின் கடுமையான மீறல்கள் மற்றும் இதுபோன்ற பிற குற்றங்கள் தொடர்பாக முன்னைய ஆணைக்குழுக்களால் கூறப்பட்ட விடயங்களை கண்டறிதல் மற்றும் கூறப்பட்ட உண்மைகளை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான பரிந்துரைகள் முன்வைக்கப்பட வேண்டும் என்பதுடன், தற்போதுள்ள சட்டத்தினடிப்படையில் அந்த பரிந்துரைகள் இதுவரை செயல்படுத்தப்பட்ட விதம் மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைக்கேற்ப அந்த பரிந்துரைகளை மேலும் எவ்வாறு செயல்படுத்துவது?, என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் ? என்ற சிபாரிசுகளை முன்மொழிவதும் தேவையான நடவடிக்கை எடுத்து மேற்பார்வை செய்தலும் இந்த ஆணைக்குழுவின் பணியாகும். விசாரணைகள் மற்றும் விசாரணைகளை நடத்துவதற்கான இடைக்கால அறிக்கைகளை ஜனாதிபதிக்கு அனுப்புவதற்கும் ஆணைக்குழுவுக்கு அதிகாரமுண்டு. விசாரணைகள் மற்றும் பரிந்துரைகளுடன் ஆறு மாத காலத்திற்குள் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் இந்த ஆணைக்குழுவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் நிறுவனங்களுடன் தொடர்ந்து பணியாற்றுவதே அரசாங்கத்தின் கொள்கையாகும் எனவும் ஜனாதிபதி வெளியிட்டுள்ள வர்த்தமானியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்தாண்டு மார்ச் மாதம் நடைபெற்ற மனிதவுரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கும் முன்னைய தீர்மானங்களுக்கு வழங்கப்பட்டிருந்த இணை அனுசரணை வாபஸ் பெறப்பட்டிருந்த நிலையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 26,27ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள பேரவையின் கூட்டத்தொடருக்கு முன்னதாக இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
from tkn