இணையத்தளம் மூலம் மோசடிகள்; ஏமாற வேண்டாமென பொதுமக்களுக்கு அறிவிப்பு

- பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்து இணையதளத்தின் மூலம் பல்வேறு விதத்தில் நிதி மோசடிகளை மேற்கொண்டு வரும் இரண்டு வெளிநாட்டவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.​ மேல்மாகாண புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய அவர்கள் கல்கிசை பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்புக்கிணங்க மேற்படி வெளிநாட்டு நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னரும் இத்தகைய மோசடிகளில் ஈடுபட்ட சில வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இவர்கள் சட்டத்திற்கு அகப்படாத வகையில் இணையத்தளத்தின் ஊடாக நிதி கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.அது தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கேட்டுக்கொண்டுள்ளார். கல்கிசை பிரதேசத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த மேற்படி வெளிநாட்டவர் இருவரும் நைஜீரியாவை சேர்ந்தவர்கள் என்றும் சுற்றுலா விசா மூலம் இலங்கைக்கு வந்த இவர்கள் வீசா காலம் முடிவடைந்த நிலையிலும் நாட்டில்தங்கியிருந்து இணையத்தள மூலமான பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர்களின் கணனி மற்றும் கையடக்க தொலைபேசிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 01/11/2021 - 12:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை