நாட்டிலுள்ள பாடசாலைகளுக்கு இணையத்தள வசதிகளை ஏற்படுத்தி வெளிவாரி கல்வி வசதிகளை முன்னேற்றும் வகையில் ஹுவாவி நிறுவனம் அதற்கான 30,000 உபகரணங்களை பெற்றுக்கொடுப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அந்த நடவடிக்கைகளுக்கான உபகரணங்கள் மற்றும் உதிரிபாகங்களை இலவசமாக பெற்றுக் கொடுப்பதற்கு மேற்படி நிறுவனம் கல்வி அமைச்சின் ஊடாக இணக்கப்பாட்டை தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை மிகவும் பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்தும் வகையில் இணையதள வசதிகளை பாடசாலைகளுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு கிடைத்துள்ள சந்தர்ப்பமானது காலத்துக்கு பொருத்தமானதும் மிகவும் பெறுமதியானதுமாகும் என கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார். மேற்படி செயற்றிட்டம் தொடர்பான விசேட பேச்சுவார்த்தையொன்று கல்வியமைச்சில் அமைச்சரின் தலைமையில் நடைபெற்றுள்ளது. அந்த பேச்சுவார்த்தையில் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, தகவல் தொழில்நுட்ப கல்விப் பிரிவின் பணிப்பாளர் உதாரா திக்கும்புர உள்ளிட்ட அதிகாரிகளும் ஹுவாவி ஸ்ரீலங்கா நிறுவனத்தின் உப தலைவர் இந்திக டி சொய்சா, பிரதம நிறைவேற்று அதிகாரி ரிகார்டோ ஷியாவோ உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.(ஸ)
லோரன்ஸ் செல்வநாயகம்
from tkn