நுண்கடன் பொறிக்குள் சிக்கியுள்ள கிராமிய மக்களை மீட்கும் விசேட வேலைத்திட்டம்

நாடு முழுவதும் இன்று ஆரம்பம், அனுராதபுரத்தில் முதல் நிகழ்வு

நுண்கடன்கள் காரணமாக கடன் பொறிகளுக்கு சிக்கியுள்ள கிராமிய மக்களை மீட்டெடுப்பதற்கு நாடு முழுவதும் விசேட வேலைத்திட்டமொன்றை இன்று சனிக்கிழமை முதல் முன்னெடுக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தால் இந்த வேலைத்திட்டம் வழிநடத்தப்படவுள்ளதாகவும் இதன் ஆரம்ப நிகழ்வு இன்று அநுராதபுரத்தில் நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறினார். 2021ஆம் ஆண்டில் கடமைகள் ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

20 இலட்சம் சமுர்த்தி பயனாளி குடும்பங்களை வலுவாக்கும் பணிகள் இந்த ஆண்டில் முன்னெடுக்கப்படவுள்ளன.

இன்று காலை 10 மணிக்கு சாலியபு சமுர்த்தி வங்கியில் விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்று நடைபெறவுள்ளது. அதேசமயம், அநுராதபுர மாவட்டத்தில் உள்ள 54 சமுர்த்தி வங்கிகளில் கடன்களை எவ்வாறு பெற்றுக்கொள்வது? குறைந்த வட்டியுடனான கடன்களை எவ்வாறு பெற்றுக்கொள்வது? உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் சமுர்த்தி பயனாளிகளுக்காக முன்னெடுக்கப்படவுள்ளன. குறைந்த வருமானம் பெறும் கிராமப்புற மக்களுக்கு நுண்கடன்கள் பெரும் சிக்கலானது. சமுர்த்தி வங்கி என்பது சமுர்த்தி பயனாளிகளுக்கு மட்டுமே பயனளிக்கும் வங்கி என்பதை பெரும்பாலான மக்கள் புரிந்துகொள்கிறார்கள். ஆனால், அது சமுர்த்தி பெறுநர்களுக்கு மட்டுமல்ல, தொழில் செய்யக்கூடிய ஒரு தொழிலை நடத்தக்கூடிய அனைவருக்கும் குறைந்த வருமானம் உடையவர்களுக்கும் அந்த வங்கி அமைப்பில் இணைய முடியும்.

மக்களை மையமாகக் கொண்ட பொருளாதாரத்தை உருவாக்கும் பொறுப்பை நாங்கள் சரியாக நிறைவேற்றுகிறோம் என்றார்.

 

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Sat, 01/02/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை