வடமராட்சி கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் அட்டகாசம்

15 கிலோ மீற்றர் தொலைவில் 04 படகுகளில் வந்து அட்டூழியம்

யாழ்.வடமராட்சி கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி, அத்துமீறி கடற் றொழிலில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள், யாழ்.பருத்தித்துறை மீனவரின் வலைகளை அறுத்து அட்டூழியம் செய்துள்ளனர். இச்சம்பவம் நேற்று புதன்கிழமை அதிகாலை இடம்பெற்றதாக பாதிக்கப்பட்ட மீனவர் சுப்பர்மடம் மீனவர் சங்கத் தலைவர் தே.தேவதாசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிக்கையில்,

“பருத்தித்துறை சுப்பர்மடம்’ இறங்குதுறையிலிருந்து 15 கிலோ மீற்றர் தொலைவில் தொழிலுக்காக நேற்று அதிகாலை கண்ணாடி இழை படகில் சென்றேன்.

அங்கு இந்திய மீனவர்களின் 04 படகுகள் தொழிலில் ஈடுபட்டிருந்ததுடன், எனது 20 வலைகளை அவர்கள் அறுத்து எடுத்திருந்தனர்.

வலைகளைத் தருமாறு கேட்டேன். இந்திய மீனவர்கள் கற்களால் எனது படகை நோக்கி எறிந்தனர். தமக்கு அருகே வந்தால் தாக்குதல் நடத்துவோமென்று இந்திய மீனவர்கள் மிரட்டினர்.

அவர்கள் முகம் தெரியாதவாறு முகத்தை மூடி துணியை கட்டியிருந்ததுடன், பொல்லுகனையும் வைத்திருந்தனர். பல மணிநேரம் வலைகளைக் கேட்டு காத்திருந்துவிட்டு, ஏமாற்றத்துடன் கரை திரும்பினேன். சுமார் 3 இலட்சம் ரூபாய் வலைகளை இழந்துள்ளேன்’ என்றும் கவலை வெளியிட்டார்.

இச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மீனவர், பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றையும் பதிவு செய்துள்ளார்.

பருத்தித்துறை விசேட நிருபர்

Thu, 01/21/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை